பெரும் மகிழ்ச்சி
கடை வீதிகளில் கூட்ட நெரிசல் காரணமாக ஆறு மணிக்கு மேல் வண்டிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டு போக்குவரத்து மாற்றுச்சாலையில் திருப்பிவிடப்பட்டிருந்தது. இரு சக்கர வண்டிகளை சாலை ஓரத்தில் நிறுத்த இடம் தேடி மக்கள் அலைந்து கொண்டிருந்தனர்.
HP விளம்பர விளக்கின் கீழ் ஒரு கையில் விசிலும் மறு கையில் STOPஎன்று எழுதப்பட்டிருந்த வட்டமான அட்டையையும் கையில் பிடித்தபடி எரிபொருள் நிரப்ப வரும் வாகனங்களை ஒழுங்குபடுத்தி அனுப்பிக் கொண்டிருந்தார் அய்யாகண்ணு.
“ஏலேய் முருகேசா சார் வண்டிக்கு பெட்ரோல் போட்டுட்டு அந்த ஸ்கூட்டிக்கு போட்டு விடு எவ்வளவு நேரம் நிக்கிறாங்க லேடிஸ காக்க வைக்காதெ… சார் அங்க எல்லாம் வண்டியை நிப்பாட்ட கூடாது பெட்ரோல் டேங்கர் லாரி வர்ற நேரம் வண்டியை எடுங்க… பக்கத்தில் ரயில்வே ஸ்டேஷன் ஸ்டாண்ட்ல போயி நிப்பாட்டுங்க… தம்பி இஞ்சினை ஆப் பண்ணாம டேங்க் மூடியை கழட்டாதப்பா…” அதிகாரமும் அன்பும் கலந்து கூட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த அய்யாகண்ணுவின் கண்ணில் பட்டது அந்த வெள்ளை நிற கார் பார்த்தவுடன் அவரின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது.
“தாத்தோய் ஓனர் வந்துட்டாரு… வீட்டுக்கு வெள்ளனமே போகணும்னு சொன்னீரு… போயி கேட்டு சட்டு புட்டுன்னு கெளம்புற வழியப்பாரும்.” என்று சிரித்தான் முருகேசன்.
“ஏம்முலெ இழிக்கெ… வீட்லெ பொடுசுகெ காத்துக்கிடக்கும்கெ… மவனும் மருமவளும் போனஸ் வாங்கிட்டு வீட்டுக்கு வர லேட் ஆகும்னு தான்லெ வெரசா போகணும்னேன்.”
“போனஸ் இன்னைக்கு இல்லியாமே என்ன செய்வீரு?”
அதைக் கேட்டதும் அவரின் முகம் சிறுத்து விட்டது.
“சரி சரி வெசனப்படாதீரும் ஓனர் போறதுக்குள்ள போயி பேசிப்பாரும்.”
எதுவும் பேசாமல் அலுவலகம் நோக்கி நடந்தார் அய்யாகண்ணு.
சிறிது நேரம் கழித்து கையில் சில 500ரூபாய் நோட்டுகளோடு அலுவலகத்தின் கண்ணாடிக் கதவைத் தள்ளிக்கொண்டு வெளியே வந்தார். முருகேசனும் மற்றவர்களும் மறித்து ஆச்சரியத்தோடு சரமாரியாக கேள்விகள் கேட்டவர்களிடம்…
“போனஸ் இன்னைக்கு இல்லயாம் பெட்ரோல் டீசல் லோடுக்கு பணம் குடுத்துட்டாராம் அவரோட நெலமயெ சொன்னாரு, நான் என்னோட நெலமயெ சொல்லி அவசரத்துக்கு ரெண்டாயிரம் ரூபா வாங்கினேன்” என்று கூறி விட்டு முகம் கை கால்களை கழுவி, சீருடை கலைந்து, உடை மாற்றிக் கடைத்தெரு நோக்கி வேகமாக நடந்து சென்றார்.
சாலைகளின் ஓரத்தில் பட்டாசு, பலகாரக்கடைகள் மின் விளக்குகளின் அலங்காரத்தில் மின்னியது. நகரின் பிரதான சாலையில் பிரபல துணிக்கடையின் முன்பு மக்கள் கூட்டம் அலைமோதியது. கடையின் வெளியே 30% முதல் 50% வரை தள்ளுபடி என்றிருந்த விளம்பரப் பதாகையின் முன்பு இருந்த தள்ளுவண்டி கடையில் பேரம் பேசியபடி இருந்தவர்களை விலக்கி,
“ஒம்பது வயசுப் பையன், ஆறு வயசு புள்ளைக்கு சட்டை டவுசரு, பாவடை சட்டை காட்டுப்பா” என்றார் அய்யாகண்ணு.
மனைவி மரகதத்தோடு பேரப்பிள்ளைகள் மல்லுக்கட்டிக்கிட்டு இருக்குற சத்தம் சைக்கிளை நிறுத்தும் போதே கேட்டது. செருப்பைக் கழட்டிக்கொண்டே…
“எதுக்குடா சண்ட போடுறீகெ… இங்கெ வாங்கெ… தாத்தா என்ன கொண்டு வந்திருக்கேன்னு பாருங்கெ… வெரசா வாங்கெ…” குரலைக் கேட்டதும் சண்டயெல்லாம் ஓரமாக வைத்து விட்டு பேரப் பிள்ளைகள் நான் முந்தி நீ முந்தினு வாராந்தாவை நோக்கி ஓடி வந்து அவருடைய கையில் இருந்த பையப் பார்த்ததுமே அதுக்குள்ள என்ன இருக்குன்னு பிள்ளைகளுக்கு தெரிந்து விட்டது. அவ்வளவு தான், அடுத்த நிமிடம் ‘கே.. கே… கோ’வென்று பிள்ளைகள் போட்ட சத்தத்தில் அந்த பழைய கார வீடு சிறிது நேரம் அதிர அய்யாகண்ணுவும், மரகதமும் காதைப் பொத்திக் கொண்டனர்.
பேரப்பிள்ளைகள் புத்தாடைகள் அணிந்து பார்த்து மகிழ்ச்சியில் கத்திக்கொண்டு இருந்ததைப் பார்த்ததும் அய்யாகண்ணுவுக்கு மனசு மகிழ்ச்சியில் நிறைந்து விட்டது.
அடுப்படியில் இருந்து பால் கலக்காத காப்பியோட வந்த மரகதம், “போதும்… போதும்… எல்லாத்தையும் அவுருங்க… தீவாளியன்னைக்கு போடலாம்” என்று சொன்னது யாரு காதுலயும் விழவில்லை.
“போனஸ் போட்டாங்களா இன்னைக்காவது?” மரகதம் கேட்டதும் அவருடைய முகம் வாடியதைப் பார்த்ததுமே புரிந்து கொண்ட அந்த ‘மகராசி’ மேற்கொண்டு அதைப் பற்றி அவரிடம் எதுவும் கேட்கவில்லை.
“பஞ்சாலை வேல முடிஞ்சு இன்னும் கொஞ்ச நேரத்துல மருமவளும் மகனும் வந்துருவாங்க, மருமவளுக்கு வந்ததும் ஒரு வாய் காப்பி குடிச்சாத்தான் அடுத்து வேலையே ஓடும்.” மனதுக்குள் எண்ணம் ஓடவே அடுப்பில் இருந்த காப்பியில் பால் ஊற்றி கொதிக்க வைத்தாள் மாமியார் மரகதம்.
காலில் கிடந்த செருப்பை வேகவேகமாக கழட்டிப் போட்டுவிட்டு, பின்கட்டு பக்கம் போய்விட்டு வந்து , மாமியார் குடுத்த காப்பியக் குடித்து விட்டு ஆசுவாசப்படுத்திக்கொண்டு பைக்குள்ள வைத்து இருந்த பணத்தை எடுத்த மருமகள் இளவரசி,
“அத்தே இந்தாங்க போனஸ் பணம் நாளைக்கு நீங்க ரெண்டு பேரும் போயி ஒங்க மகளுக்கு பட்டுச்சேலையும் மாப்பிள்ளைக்கு சட்டை பேண்ட்டும் வாங்கி குடுத்துட்டு தீபாவளிக்கு அழைச்சுக்கிட்டு வந்துருங்க” எனச் சொல்லி பணத்தை மாமியார் கையில் திணித்தாள்.
மாமியார் மரகதம் செய்வதறியாமல் நிலை குத்தி நின்றிருந்தாள். பணமில்லாமல் மகளையும் மருமகனையும் ரெண்டாவது தீபாவளிக்கு கூப்பிட முடியாமல் போய்விடுமோ என்று தவித்த அந்த தாயுள்ளம், ‘மருமக பஞ்சாலையில கஸ்டப்பட்டு உழைச்சு மொத மொதலா வாங்குன போனஸ் பணத்த கையில திணிச்சது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் வீட்டுல பெரியாளுக யாருக்குமே புதுத்துணி எடுக்கலனு…’ ஞாபகம் வரவே என்ன செய்வதென்று தெரியாமல் தன் கணவன் முகத்தைப் பார்த்தாள்.
அத்தையையும் மாமாவையும் பார்த்த இளவரசி, “மாமாவ எதுக்கு அத்தே பாக்குறீங்க அவுக ஒண்ணும் சொல்லமாட்டாக நீங்க மொதல்ல பணத்த உள்ளாற வெச்சுட்டு வாங்க… போங்க” என உரிமையோட அதட்டினாள்.
அய்யாகண்ணு மனைவியைப் பார்த்து தலையசைக்கவும் பணத்தைக் கொண்டு போய் பெட்டியில் வைத்து விட்டு வந்த மாமியாரின் கைகளைப் பிடித்து தன் அருகில் உட்க்கார வைத்தாள் இளவரசி.
“அத்தே எதுக்கு தயங்குறீங்க? நம்ம கயல்விழிக்கு தான செய்யுறோம் என்னயயும் கயலையும் எதுக்கு பிரிச்சு பாக்குறீங்க? அவ என் தங்கச்சி மாதிரி… அதுனால நீங்க தயங்காதீங்க இந்த வருச தீபாவளிக்கு அவ நம்ம கூட தான் இருப்பா… கவலப்படாதீங்க அத்தே…”
இளவரசி பேசுவதைக் கேட்டுக்கொண்டே உள்ள வந்த அன்பழகனுக்கு மிகுந்த மகிழ்ச்சி. தன் மனைவிக்கு தன் தங்கச்சி மேல இருக்குற பாசத்தைப் பார்த்ததும் அவனுக்கு கண் கலங்கியது. அம்மாவின் பக்கத்தில் உட்கார்ந்து இருந்த மனைவியின் கைகளைப் பிடித்து அவள் அருகில் அமர்ந்து கொண்டான். கணவனின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைப் பார்த்ததும் இளவரசிக்கும் ரொம்பவும் மகிழ்ச்சி.
உள் அறையில் இருந்து உடுத்திய புதுத்துணியோடு வராந்தாவிற்கு ஓடி வந்த பிள்ளைகள் அப்பாவின் கையில் இருந்த பொட்டலத்த்தைப் பார்த்து ஆவலோடு பாய்ந்தார்கள். பரபரவென்று பிரித்தான் கலையரசன். முத்துலாபுரம் கருப்பட்டி மிட்டாய், சாத்தூர் காராச் சேவு, கோவில்பட்டி முறுக்கும் அதிரசமும் இருந்தன.
காகிதம் சுற்றி இருந்த சிறிய அளவிலான அட்டைப் பெட்டியைப் பிரித்தாள் கனிமொழி. சேவல் மார்க் பட்டாசு கம்பெனியின் கிப்ட் பாக்ஸ் அது… கம்பி மத்தாப்பு, தரைச் சக்கரம், சீனி வெடி, ஓல வெடி, பொட்டு வெடி , துப்பாக்கி என்று எல்லாம் கலந்து இருந்தது. அடுத்த நொடி பெரியவர்கள் நான்கு பேரும் காதுகளைப் பொத்திக் கொள்ள சிறுசுகள் இரண்டும் கத்தி அடங்க சிறிது நேரம் ஆனது.
கன்னங்கரேலென பின்னல் பின்னலாக வட்டமாக இருந்த கருப்பட்டி மிட்டாயை வாயில் வைத்து கடித்தவுடன் மொறுமொறுப்பாக உடைந்து வாய்க்குள்ளும் உதட்டிலும் வழிந்த கருப்பட்டிப்பாகுவை துடைத்தபடியே கையில் மீதி இருந்த அரை வட்ட மிட்டாய் துண்டோடு வாசலுக்கு வந்தான் கலையரசன்.
“கனி… அண்ணாக்க நிமிர்ந்து வாயெத் தொற” என்றான்.
“எனக்கு ஒண்ணும் வேணாம் நீயே தின்னு.”
“வாயெத் தொறன்னா தொறயேன்.”
“என்னத்துக்காம்?”
“ஒன்ன பாக்க வெச்சி தின்னா எனக்கு வகுறு வலிக்கும்.”
“அதெல்லாம் வலிக்காது… நான் வெடி போட்டுட்டு அப்புறமா தின்கிறேன்.”என்றாள் கனிமொழி.
“கலை, கனி ரெண்டு பேரும் இங்க ஓடி வாங்க… அப்பத்தான் அப்பா ஒரு சேதி சொல்லுவேன்.”
இருவரும் அருகில் வரவே மகளை அப்பாவும், மகனை அம்மாவும் மடியில் அமர்த்திக் கொண்டனர்.
“இன்னைக்கே ரெண்டு பேரும் புது ட்ரெஸ் போட்டு , பட்டாசு எல்லாம் வெடிச்சிட்டா… நாளைக்கு கயல் அத்தையும், மகிமா பாப்பாவும் வரும் போது என்ன பண்ணுவீங்க…” என்று அன்பழகன் கூறிய அடுத்த நொடி கலையரசனும், கனிமொழியும் மடியில் இருந்தபடியே மகிழ்ச்சியில் துள்ளிக் கத்த தொடங்கும் முன் இருவரின் வாயையையும் பொத்தி கட்டிப் பிடித்து சிரித்தபடியே இருவரையும் அடக்கிக் கொண்டு இருந்த மகனையும் மருமகளையும் பார்த்து, அய்யாகண்ணுவும் அவர் மனைவியும் சிரித்து ஆனந்தக் கண்ணீர் வடித்தார்கள்.
அத்தையும் அத்தை மகளும் வரப் போகும் ஆனந்தத்தில் கலையரசனும் கனிமொழியும் சிரித்தபடியே கம்பி மத்தாப்பைச் சுழற்ற வண்ண வண்ணமாய் வெளிச்சம் வட்டமாகவும் நாலா புறமும் சிதறி ஒளி வீசியது. வீட்டில் இரண்டு நாள் முன்பே தீபாவளிக் கொண்டாட்டம் தொடங்கி இருந்தது.
குறள் 45:
“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.“
பொருள்:
மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே; பயனும் அதுவே.
-லிண்டோ சசி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக