இல்லறம்... நல்லறம்...
ஊருக்கு நடுவே இருந்த அந்த ஆலமரத்தில், ஒரு சிறிய கிளையின் மீது அமர்ந்து இருந்தது ஒரு அழகிய காகம். அது தன்னுடைய தலையை அங்கும் இங்கும் திரும்பிப் பார்க்க, அதன் கண்ணில் கதிரவன் போல சிவந்த ஒரு ஆலம்பழம் தென்பட்டது. அதை சிறிது எட்டித் தன் அலகால் கொத்த, அந்த பழமோ கிட்டியதொரு வாய்ப்பு என, கீழே விரைந்தது. காகமோ இனி இந்த பழம் தனக்கு இல்லை என எண்ணி அடுத்த பழத்தை தேடலாம் என எண்ணியது.
கீழே விரைந்த பழம் அங்கே, பல நாள் துவைக்காத ஒரு அழுக்கு வேட்டி கட்டியிருந்த பெரியவரின் தலை மேல் விழுந்தது. அந்த பழம் அவர்மேல் பட்டு, அங்கே விளையாடி களைத்த இரு நாய் குட்டிகளின் பக்கமாக உருண்டு ஓடியது. அவரோ இது எப்போதும் நடக்கும் நிகழ்வு என எதையும் கவனிக்காது, மேலும் தன் புலம்பல்களைத் தொடர்ந்தார். அதைக் காற்றும், மண்ணும், மரமும், மரத்திற்கு அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீர் பிடித்துக்கொண்டு இருந்த அகர முதல்வனும் கேட்டுக்கொண்டு இருந்தனர். ஆடிக் களைத்த குட்டிகளும் உறங்கி இருந்தன.
குடம் நிரம்பும் ஓசை கேட்டு அடுத்த குடத்தை மாற்றி வைத்தான். அப்போது அந்த பெரியவர் துறவறம் என்றால் என்ன என்பதை பற்றியும், பற்றற்று இருப்பது என்றால் என்ன என்பது பற்றியும் பேசிக்கொண்டு இருந்தார். ஆர்வமாக கேட்டுக்கொண்டு இருந்தவன், அடுத்த குடம் நிரம்பும் ஓசை கேட்டு குழாயை அடைத்துவிட்டு, அவன் சைக்கிளில் இருந்த அந்த கயிறை எடுத்து குடத்திற்கு சுருக்கு மாட்டி, சைக்கிள்’லில் வைத்து மிதிக்க வீடு வந்து சேர்ந்தான்.
வீடு வந்தவனை பார்த்த அம்மா இன்மொழி, “அகரா, அத தொட்டியில ஊத்தாத, ஊட்டுல போய் எறக்கி வை. ஒரு தொட்டிய நான் ‘பாக்கியம்’ அக்கா வூட்டுக்குழாயில புடிச்சு நிரப்பிட்டேன், பொழங்க இது போதும், நாளைக்கு தண்ணி வரும்னு சொல்லிருக்காங்க, வேணும்னா நாளைக்கு எடுத்துக்கலாம்” எனச் சொல்ல, அவனும் குடத்தை இறக்கி, அதன் மீது தட்டுகளை எடுத்து மூடி வைத்துவிட்டு, ஓரமாக இருந்த கயித்து கட்டில் மீது அமர்ந்து யோசனையில் அமர்ந்தான்.
வெளியே இருந்த கருவேப்பிலை மரத்தில் இருந்து ஒரு கொத்து பறித்து “எண்ணைய வேற அடுப்புல வச்சிட்டேன்” என வேகமாக வீட்டுக்குள் ஓடினாள் இன்மொழி. சிறிது நேரத்தில் வீட்டில் மிளகாய் நெடி நிரம்ப, ஒரு தட்டில் இட்லி உப்புமாவை வைத்து “பசிக்கிது சொன்னியே, சாப்பிடு” என சொல்லிவிட்டு, நின்றும் பாராமல் அடுத்த வேலை செய்ய ஓடினாள். சிறிது நேரம் கழித்து கையில் வெங்காய பொட்டும், பூண்டு பொட்டும் எடுத்துக்கொண்டு சென்றவள், அதை எருவு குழி வீசிவிட்டு திரும்பி வரும்போதும் தட்டு உப்புமாவுடன் அங்கேயே இருப்பதைக் கண்டு, பேச ஆரம்பித்தாள்.
“என்னடா இன்னும் சாப்பிடாம யோசனைல இருக்குறயாடங்குது?”
“அதெல்லாம் ஒன்னுல்ல…”
“ஒன்னும் இல்லைனா இந்நேரம் தட்டு தொடைச்சு வச்சி இருப்ப, என்ன யோசனைன்னு சொல்லு!”
“ஏம்மோய்! அந்த பெரியவர பத்தி என்ன நெனைக்குற?”
“எந்த பெரியவரு?”
“அதான் மா அந்த ஆலமரத்தடி பெரியவர்.”
“அவர் கெடக்குறாரு, ரொம்ப நாளா பைத்தியமாட்ட பெனாத்திகிட்டு… ஏன்? அவருக்கு என்னாச்சு இப்ப?”
“ம்மோய், நம்ம தான் அவரை பைத்தியமாட்ட பாக்குறோம், ஆனா அவரு துறவு, பற்று இல்லாம இருக்குறதுன்னு எவ்வளவு சூப்பரா பேசுறாரு தெரியுமா?”
“உன்ன கூப்புட்டு வச்சி பேசினாரா?”
“இல்ல, எப்பயும் போல தனியாத்தான் பேசிட்டு இருந்தாராச்சு”.
“இப்போ அந்த பொலம்பல கேட்டுட்டு வந்து தான் இப்படி யோசனைல இருக்குறயா. சரி, சொல்லு… என்னவாம் அவருக்கு? தொறவுன்னா என்னவாம்?”
“துறவு அப்படின்னா பந்த பாசம்ன்னு எல்லாத்தையும் விட்டுப்போட்டு, இந்த உலகத்துல இருக்கிற சந்தோஷத்தையும் சோகத்தையும் ஒதுக்கிவச்சி, நம்ம மனசுல இருக்குற ஆசைய அடக்கி, நமக்குன்னு இருக்குற எல்லாத்தையும் விட்டுட்டு, எது மேலயும் பற்று இல்லாம, எந்த உறவும் இல்லாம, வீடு, வாசல், சுற்றம், நட்புன்னு ஏதும் இல்லாம எந்த உசுருக்கும் கேடு நெனைக்காம இருக்குறதாம்” என சொல்லிக்கொண்டு இருக்க வெளியே இருந்து யாரோ அழைத்த சத்தம் கேட்டு திரும்பினாள் இன்மொழி.
“சரி, இரு யாருன்னு பாத்துட்டு வரேன்” என கூறி வெளியே சென்றவள், வீட்டுக்கு உள்ளே வந்து, கையில் ஒரு தட்டில் சோறும், டம்ளரில் குழம்பும் எடுத்துக்கொண்டு வெளியே சென்றாள்.
இவன் யோசனையில் விழ, திரும்ப கையில் கொஞ்சம் சாப்பாடோடு வந்தவள் “தண்ணி புடிக்குற அவசரத்துல மறந்தே போயிட்டேன், பக்கத்து வீட்டு சோனி’யும், டாமி’யும் முன்னயே வந்து பாத்துட்டு போய்டுச்சுங்க, 'மரகதம்' அக்கா ஊருக்கு போகும்போதே நாய்க்குட்டிக்கு மட்டும் சாப்பாடு வச்சுடுங்கன்னு சொல்லிட்டுப் போச்சு” எனச் சொல்லி இவனை அனுப்பினாள்.
அவனும் கையில் இருந்த சாப்பாட்டை இரண்டு தொட்டியிலும் கொட்டிவிட்டு, வெளியே யார் வந்து இருப்பார்கள் என எட்டிப் பார்த்தான். ஆலமரத்தடி பெரியவர் மூன்றாம் வீட்டு திண்ணையில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். என்னமோ நினைத்து உள்ளே வந்தவனை பார்த்து “ஏன் கண்ணு, எல்லாரும் வீடு, வாசல், ஒட்டு உறவுன்னு எல்லாத்தையும் விட்டுட்டு துறவியா போய்ட்டா, துறவிங்க எல்லாம் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவாங்க?” என கேட்டுவிட்டு வெளியே சென்று மதில் சுவற்றின் மீது கையில் இருந்த சாப்பாட்டை வைத்து “கா.. கா.. கா..” என கரைந்துவிட்டு வந்தாள்.
“ஆமா இவங்க எல்லாம் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவாங்க?” என யோசித்து இட்லி உப்புமாவை வெளியே எடுத்துக்கொண்டு வந்து ஒரு வாய் எடுத்து சாப்பிட அங்கே பெரியவர் இல்லை, அவர் கெளம்பி இருந்தார், சோனி’யும், டாமி’யும் சட்டியை சுற்றி சுற்றி வந்து மோப்பம் பிடித்துக்கொண்டு இருந்தனர், எங்கோ இருந்து வந்து தன் இறகை அடக்கி, மதில் சுவரின் மீது அமர்ந்தது ஒரு காகம்.
குறள்:
துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.
விளக்கம்:
பற்றற்ற துறவிகட்கும், பசியால் வாடுவோர்க்கும், பாதுகாப்பற்றவர்க்கும் இல்லற வாழ்வு நடத்துவோர் துணையாக இருத்தல் வேண்டும்.
- ப.ஜனார்த்தனன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக