திங்கள், 5 நவம்பர், 2018

41. காலமே விடை

தன்னிலை விளக்கம்:  தோன்றிய ஒரு கருவைச் சரியாக சொல்லிட முனைந்து, எந்த விதத்திலும் தவறான கருத்துக்களைச் சொல்லிவிடக்கூடாது என்ற கவனத்திலும் “மெளனவலிகளின் வாக்குமூலம்” என்ற சமூக சிற்பிகளின் புத்தகத்தைப் படித்து அதன் தரவுகளை எடுத்துக்கொண்டு என் கருவினில் சில கற்பனைகளைப் புகுத்தியே எழுதப்பட்டதாகும். அந்த புத்தகத்தின் தரவுகள் உண்மையாக இருக்கும்வேளையில் இதில் கூறப்பட்ட தரவுகளும் உண்மையே, எந்த ஒருவரையும் தாக்கும் எண்ணத்தில் தரவுகளைப் பொய்யாக புனையவும் இல்லை புகுத்தவும் இல்லை. கதையில் வரும் கதாபாத்திரங்களும், செயல்களும் கற்பனை வடிவமே.

                                                    

                       காலமே விடை


            கன நாளாக தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு. இருளின் கடின உழைப்பைக் காயங்கள் ஏதுமின்றி களைத்தெறிந்து கொண்டிருக்கிறது நிலவு. நிலவின் வெளிச்சம் வீட்டினுள் புகுந்து வீட்டை வெளிச்சமாக்கிக் கொண்டிருக்கிறது. அழகியத் தூறலாக இருந்த மழை இப்போது நிலத்தில் வேகமாக அடிக்க, தண்ணீரின் அடர்த்தியால் அடி தாங்க முடியாத நிலம், மனிதனின் முதுகைப்போல சிவக்கத் தொடங்கியது. வீட்டின் கதவை மூடிவிட்டு ஈரக்காற்றை வீட்டினுள் அனுமதிக்காமல் தடுக்க நினைக்க, அது திறப்பானின் துளையில் நுழைந்து வீட்டை வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வை இப்படியாக ரசிக்க ஆசையாய் இருந்தும் ஆசை என்பதை மறந்து பல ஆண்டுகள் ஆகியிருந்தமையால் ஆசையின் இடத்தை நிரப்பியிருந்த பயம், இதனை வேறு மாதிரியாக நினைக்க வைத்திருக்கிறது.


            கன நாளாக தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு. எப்போது இது நிற்கும் என்று தெரியவில்லை. அது நிற்கும் தருவாயில் 'என் உயிர் என் இடத்தில் இருக்குமா?' என்றும் தெரியவில்லை. இருளின் கடின உழைப்பைக் காயங்கள் ஏதுமின்றி களைத்தெறிந்து கொண்டிருக்கிறது நிலவு. இதனாலே அந்த நிலவின் மீது மிகுந்த கோபம். எங்கள் பயத்திற்கு விடுதலை கொடுப்பதே அந்த இருள் தரும் பாதுகாப்புதான். அதனைக் கெடுத்து வீட்டினுள் இருக்கும் எங்களைக் காட்டிக்கொடுக்க நினைத்துக் கொண்டிருக்கிறது நிலவு. அழகிய தூறலாக பெய்த மழையும் எம் பெண்களை அவர்களே பாதுகாக்க செய்யும் உத்தியை தவிர்க்க நினைத்து அடைமழையாய் பெய்து வஞ்சனைச் செய்துகொண்டிருக்கிறது. வீட்டின் கதவை மூடிவிட்டேன். காற்றில் இருக்கும் ஈரம் மனிதனின் மனதில் இல்லாமல் போகவே எங்கே துளைப்பானின் துளை வழியே வீட்டினுள் பார்த்துவிடுவார்களோ என்ற பயம் தொற்றிக்கொண்டது.


            இப்படி மனம் முழுதும் பயம்தான். பயம் எங்களுக்கு புதிதல்ல, பல வருடங்களாக எங்கள் வாழ்க்கையை நிம்மதியாக வாழமுடியாமல், கைக்கொடுத்து உதவ யாருமில்லாமல், கொடுப்பவன் கை காப்பாற்றக் கொடுக்கிறதா காட்டிக்கொடுக்க கொடுக்கிறதா என்று தெரியாமல் எங்களுக்கு நன்கு பழக்கி வைத்திருந்த ஒன்றுதான் பயம்.


            இன்றைய இப்போதைய எங்கள் பயத்திற்கு காரணம், காட்டுப்புளியங்குளத்தில் இறங்கியப் புலிகள்தான். வுவுனியாவுக்கு திரிகோணமலைக்கும் இடையில் உள்ள ஒரு சிறிய கிராமம் அது. இரண்டு புத்தாண்டுகளை ஒரே நேரத்தில் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருந்த அந்த கிராமத்தில் இறங்கியப் புலிகளால் எங்களது ஒரே புத்தாண்டைக்கூட கொண்டாட முடியாமல் எங்கள் மனதில் பயம் இறங்கியது.


            வருபவர்கள் எந்த சாதியை சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை. இந்தியாவில் கடைநிலை சாதி என்பதாலேயே எப்படி ஓரம்கட்டப்படும் அவல நிலை இருந்ததோ, இருக்கின்றதோ அதேபோலதான் இங்கும். ஆனால் இங்கு சாதி என்பது தமிழ் சாதி, முஸ்லிம் சாதி, சிங்கள சாதி என்று மூன்று பெரும் சாதி மனிதர்களைத்தான் முதலில் குறிக்கும்.


நல்லிணக்கம் என்று கிறிஸ்துவத்தில் இருந்து கடன் பெற்ற சொல்லை நிலை நாட்ட மூளையற்று சண்டையிட்ட இந்து தமிழர்களும் முஸ்லிம் தமிழர்களும் போராடிவருகின்றனர். ஆனால் தமிழ் இனத்தில் பிறந்தோம் என்பதற்காகவே சிங்களப்படையும் இந்திய அமைதிப்படையும் ஒரே இலக்காக எங்களை அழித்துக்கொண்டிருக்கிறது.


வருபவர்கள் எந்த சாதி மனிதர்கள் என்று தீவிரமான பயத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இரவு நேரமென்பதால் புலிகள் ரோந்து வரும் நேரம்தான் இது. ஆனால் இந்த இடி மழையை கடந்து வரும் குடலை குமட்டும் நெய் வாசனையையும், இருட்டில் தெரியும் சிவப்பு தலைப்பாகையையும் பார்த்தால் வருவது இந்தியன் ஆமி என்பது வீட்டின் ஜன்னலில் எட்டிப்பார்க்கும் எனக்கு நன்றாக புரிந்துவிட்டது. காட்டுப்புளியங்குளத்தில் இறங்கிய புலிகள் படையால் கோபம் கொண்ட இந்திய அமைதிப்படை யாழ்ப்பாணத்தில் களமிறங்கியிருக்கிறது. இன்று இங்கு நடந்துகொண்டிருக்கும் இந்த இக்கட்டான போர் சூழ்நிலைக்கு முக்கியக் காரணமான படை இந்த இந்திய அமைதிப்படை. அமைதிக்கு வந்ததாகக்கூறி அமைதியைக் குலைத்த இராணுவப்படை இந்த இந்தியப்படை.


இன்று காலையில்தான் வீட்டுக்கு ஒருவரை இயக்கத்தில் இணையச் சொல்லி வந்து சென்றிருந்தார்கள். எந்தவொரு செயலுக்கும் எதிர்வினை உண்டல்லவா?. அதனால் எதிர்பார்த்த எதிர்வினைதான் இது. இயக்கத்திலிருந்து வந்து சென்ற செய்தியைத் தமிழ் இனத் துரோகிகள் ஆமிக்குச் சொல்லியிருக்கக்கூடும்.


இப்போது வருபவர்கள் என்ன திட்டத்துடன் வருகிறார்கள் என்பது தூரத்தில் அவர்கள் செய்யும் அட்டூழியங்களிலே நன்றாக தெரிகிறது. கனத்த மழைப் பெய்து கொண்டிருப்பதால் சுடுமணலை தின்னச் சொல்ல இயலாது அவர்களால். உடுப்புகளின்றி சுடுமணலில் புதைத்து வைக்கவும் இயலாது. ஹிந்தி பாட்டு பாடச் சொல்லி பாடாதவர்களைச் சுடும் மனநிலையில் அவர்கள் இல்லை என்பதையும் யூகித்துக்கொண்டேன். புலிகளைப் பற்றிய தகவலைச் சொல்ல மறுக்கும் பிஞ்சு குழந்தையைச் சுடும் மனநிலையிலும் இப்போது இல்லை. நடுராத்திரியில் கொட்டும் மழையில் ஆமி இறங்கியிருப்பதால், பெண் பிள்ளைகளைத் தேடித்தான் வந்திருக்கிறார்கள் என்பதை நன்றாக யூகித்துக்கொண்டேன். அவர்களது செயலும் அதனைச் சொல்லிக்கொண்டிருந்தது.


எதோ ஒரு ஊரில் என் மகன் பதுங்கு குழியில் பாதுகாப்புக்கு நின்று கொண்டிருக்க, என் வீட்டில் இருக்கும் பெண் பிள்ளைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு முழுதும் இப்போது என் தலையில் இறங்கியிருக்கிறது. திருமணமாகி நான்கு திங்களே ஆன எண்ட மருமகளைக் காப்பாற்றிட உள்ளம் பதறுகிறது.


இந்த மாதத்தின் முதல் திகதியில் ஆமி இறங்கியிருந்தபொழுது அவர்கள் கண்டு நடுங்கும் அம்மை நோய் இருப்பதைப்போல வேப்ப இலையை வீட்டில் கட்டி காப்பாற்றித் தந்தாள் என் மனைவி. அதற்கு முந்திய முறை வந்திருந்த பொழுது வீட்டிற்குள் இருந்தால் பாதுகாப்பில்லையென தெருவின் முற்றத்தில் கூடி நின்று மானத்தைப் பாதுகாத்துக்கொண்டனர்.


கடந்த இரண்டு முறையும் பகலில் வந்திருந்தார்கள். ஆனால் இந்தமுறை கொட்டும் மழையில் காமத்தைத் தீர்க்க அனாதையாய்க் கதியற்று நிற்கும் எங்களை நோக்கி வந்திருக்கிறார்கள். இப்போது எந்த உத்தியைப் பயன்படுத்தி இரக்கமில்லாத அந்த மிருகங்களிடமிருந்து எங்களைப் பாதுகாப்பதென்று விளங்கவில்லை. மேலும் பதற்றம் தொற்றிக்கொண்டது.


"இந்தியன் ஆமியா?” என பயமான குரலுடன் வினவினாள் என் மனைவி.


"ஓம்"


"இப்போ என்ன செய்ய? எங்கள் இருவரைப் பற்றிய கவலை வேண்டாம். நம்ம மருமவளைக் காப்பாற்றிக்கொடுங்கள்” என்று கண்ணீர் வடிய கேட்டாள்.


"அத்தை நீங்கள் அழுகாதீர்கள். ஒன்றும் தவறாக நிகழாது."


"இல்லை, உண்ட கணவன் இயக்கத்தில் இருப்பது அவர்களுக்கு தெரிந்திருக்கும். அதனால் கட்டாயம் ஏதாவது செய்வார்கள்” என்றாள்.


"எண்ட மகளே, கடந்த முறை அவர்கள் வந்து சென்றபின்பு பதுங்குவதற்காக நாம் வெட்டி வைத்தோமே... அந்த குழியில் இறங்கிப் படுத்துக்கொள்” என்றேன்.


"இல்லை மாமா, அதில் இருவர் மட்டும்தான் பதுங்கமுடியும், அது இன்னமும் முழுதாக வெட்டி முடியவில்லை. தோட்டத்தில் வெட்டிய குழி முழுதும் மழை நீர் இறங்கியிருக்கும். உங்களை விட்டு நான்மட்டும் எப்படி போவனன்” என்று அடம்பிடித்தாள். இப்படி பதட்டத்தில் என்ன செய்வதென்று புரியாமல் உயிரையும் மானத்தையும் காப்பாற்ற நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில் நெய் வாடையும், கூடவே புகை வாடையும் வீட்டருகே நெருங்கியிருந்தது.


"கதைத்துக்கொண்டிருக்க நேரமில்லை மோனே, அவன் சொல்லுபடி செய்" என்று நோய்வாய்ப்பட்டுப் படுத்திருந்த எண்ட அம்மை உத்தரவிட, சமையல் அறையில் வெட்டி வைத்திருந்த குழியில் எண்ட மனைவியும், எண்ட மருமகளும் இறங்கத் தயாராயினர். அந்த குழி இன்னமும் முழுதாய்த் தயாரான குழியல்ல, யார் கண்ணுக்கும் புலப்படாமல் வெட்டி தயார் செய்தும், அதை மூட சிமெண்ட் மூடியை மறைத்து எடுத்துவர காலமாவதால் திறந்த வெளியாகவே இருக்கின்றது.


முதலில் என் மருமகள் இறங்கி அதில் ஒரு ஓரத்தில் அமர்ந்துகொண்டிருக்க,  கதவை டப்… டப் என வேகமாக அடிக்கும் சத்தம் கேட்டது. என் மனைவியின் கண்ணீர் அதிகரித்தது, சத்தம் வெளியில் வராமல் இருக்க வாயைப் பொத்திக்கொண்டாள். அவளையும் வேகமாகக் குழியில் இறக்கிவிட்டு, மிகவும் இறுக்கமான இட சூழ்நிலையில் இருக்க வைத்து அருகில் தண்ணீர் பிடிக்க வைத்திருந்த பெரிய ட்ரம்மை எடுத்து குழியில் மீது வைத்து, குழியை மறைத்தேன்.


"நான் வந்து திறக்கும் வரையிலும் எழுந்து வர முயலாதீர்கள்” என்று ட்ரம்மை மூடினேன். “ஓம்” என்று அவள் அளித்த பதில் குழியை மூடியபின்னும் வெளியில் கேட்க, டப்.. டப்… டப்… என இம்முறை கதவு வேகமாக தட்டப்பட்டது. நான் ஓடிச் சென்று கதவை சடாரென்று திறக்க, உள்ளே நடப்பதைத் தெரிந்துகொள்ள கதவின் திறப்பான் வழி பார்க்க முனைந்து கொண்டிருந்தவன் நிமிர்ந்தான்.


கதவை திறந்தவுடன் என்னைத் தள்ளிவிட்டு உள்ளே விரைவாக நுழைந்தனர் மூவர் கொண்ட குழு. என்னை ஒருவன் துப்பாக்கி முனையில் வைத்திருக்க... இன்னொருவன் வீட்டினுள் சுற்றி முற்றி பார்த்துக்கொண்டிருக்க, மற்றொருவன் சமையல் அறையினுள் நுழைந்தான். வீட்டில் ஆட்கள் இல்லை என்பது தெரிந்தவுடன் “லடுக்கி கிதர் ஹே?” என்றான் துப்பாக்கி முனையில் என்னைப் பிடித்து வைத்திருந்தவன்.


என்ன கேட்கிறார்கள் என்று ஒருவாறு யூகித்துக்கொண்டு, “யாரும் இல்லை” என்றேன். என் பதிலை என் சைகையின் மூலம் யூகித்தவன் துப்பாக்கியின் பின்புறத்தை வைத்து என் முகத்தில் பலமாகத் தாக்கினான். வலி தாங்கமுடியாமல் இரத்தம் கொட்ட கீழே முழங்காலிட சமையல் அறையில் இருந்து “அரேய் பாய்” என்றொரு சத்தம். பயத்தில் இதயம் வேகமாகத் துடிக்க சட்டென எழுந்து நின்றுகொண்டேன். எனது இந்த செயலினால் எதையோ உணர்ந்த மற்ற இருவரும் என்னை இழுத்துக்கொண்டே சமையல் அறைக்குச் சென்று உள்ளே நின்றவனிடம் “க்யா?” என்றனர்.


சமைத்து வைத்திருந்த வடச்சட்டியினுள் அவனது பையில் வைத்திருந்த சப்பாத்தியைச் சட்டியினுள் விட்டு “அச்சா கரி பாய்” என்றான். இன்னொருவனும் அந்த சட்டியின் பக்கம் நகர, எம் முதுகில் துப்பாக்கி வைத்திருந்தவனின் சந்தேகம் இன்னும் தீரவில்லை. சமையல் அறையைச் சுற்றி முற்றிப் பார்த்தவன் ட்ரம்மை உற்றுப் பார்த்தான்.


அங்கு எதையோ உணர்ந்தவன், உடனே ட்ரம் அருகில் சென்று மூடியிருந்த ட்ரம்மினைத் திறந்து உள்ளே நோக்கினான். அடுத்து அவனது செயல் ட்ரம்மினை நகர்த்துவதுதான் என்று யூகித்துக்கொண்டு அவர்களைத் தாக்க நான் தயாராக இருக்க, அருகில் இருந்தவன், “இதர் குச் நகி யார்” என்று சோற்றில் கவனம் வைத்து மேம்போக்காக பார்வையிட்டவன் கதைக்க, ட்ரம்மை நகர்த்தும் செயலை அப்படியே விட்டுவிட்டு, பெண்கள் கிடைக்காத கோபத்தில் என்னை பிடித்து சமையல் அறையில் இருந்து வெளியில் தள்ளி, “லடுக்கி கிதர் ஹே?” என்று கத்தினான் மீண்டும். அவன் தள்ளிய வேகத்தில் கட்டிலில் படுத்திருந்த எண்ட அம்மையின் அருகில் சென்று விழுந்தேன்.


"ஏ லடுக்கி கைசே? ச்சைய்யே? " என்று என் அம்மையை கைக் காட்டினான் ஒருவன். அவனும் கொஞ்சமும் கூச்சமின்றி, சிரித்துக்கொண்டே படுத்திருந்தவளின் ஆடையை விலக்கி பார்த்து சிரிக்க, கட்டுப்படுத்த இயலாத கோபத்தில் அவனைப் பின்னுக்குத் தள்ளினேன். அடுத்த நொடி அவனது கை துப்பாக்கிக்குச் சென்றது. பின்னால் நின்ற இருவரின் கையும் துப்பாக்கியில் தயாரானது என்னைக் குறிவைத்து.


“சாலா எல்.டி.டி.ஈ வாளா” என்று அவனது துப்பாக்கி கொஞ்சமும் யோசிக்காமல் ட்ரிகரை அழுத்த, ஒரு குண்டு இதயத்திலும், இரண்டு குண்டு நெஞ்சிலும், ஒரு குண்டு வயிற்றிலும் பாய்ந்தன. குண்டுகள் பாய்ந்த இந்த நொடியும் என்ட குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மனதில் சூடான இரத்தமாய் கொதிக்க, என்னைச் சுட்டவனின் துப்பாக்கி அடுத்து எண்ட அம்மையை நோக்கி நகர்ந்தது. ஐந்தாவது குண்டை அவள் மீது செலுத்த ட்ரிகரை அழுத்த செல்ல வீட்டின் வெளியில் எல்.டி.டி.ஈ என்று ஒரு குரல் கத்தியது. அந்த பெயரின் சத்தம் கேட்டு மூவரும் பதறியடித்து வெளியில் ஓட, குறுதியில் நனைந்துகொண்டே இம்முறை எண்ட குடும்பத்தைக் காப்பாற்றிவிட்ட மகிழ்ச்சியில், ஒரு போராளியாய் உயிரை இழக்கத் தயாரானேன் என் தாயின் மடியில்.

                                              ..................

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் 
நல்லாற்றின் நின்ற துணை

உரை:

பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக