புதன், 24 ஆகஸ்ட், 2022

முகமூடி - அருள். ஜெ

முகமூடி

- அருள்.ஜெ




ராம்கோபாலுக்கு லேசாக நினைவு திரும்பியது. எப்போதோ யாரோ எதற்கோ ஒரு குடோனாகப் பயன்படுத்திய அந்த அறை இப்போது தூசியும், ஒட்டடையும் படிந்து மிக மோசமான நிலையில் இருந்தது. சுவரில் சிமென்ட் பெயர்ந்து செங்கற்கள் பல்லிளித்துக் கொண்டிருந்தன.

தூசிகள் நிறைந்து கறைபடிந்த ஒரு குண்டு பல்ப் விட்டத்தில் ஏனோதானோவென்று வெளிச்சத்தைச் சிந்திக் கொண்டிருக்க,

ராம்கோபாலின் விழிகள் மெல்ல சுழன்று யாவற்றையும் கவனித்து மூளை உள்வாங்கி, தான் ஏதோ தவறான இடத்தில் இருப்பதாய் எச்சரிக்கைச் செய்தி அனுப்ப, ராம்கோபாலின் கால்கள் தன்னிச்சையாக எழ முயற்சி செய்து தோற்றன. தனது கால்களும், கைகளும் இருக்கையில் இறுக்கமாகக் கட்டப்பட்டிருப்பதை உணர்ந்தான்.

அறையில் யாருமற்ற தனிமை அவனுக்கு அச்சத்தைக் கொடுத்தது.

ஹலோ, யாராவது இருக்கீங்களா?” என்று கத்தியவனின் குரல் எதிரொலித்து அவனுக்கே திருப்பிக் கேட்டது.

என்னை எதுக்கு இங்க அடைச்சி வச்சிருக்கீங்க?”, யாரும் பதில் சொல்லப் போவதில்லை என்று தெரிந்தும் தனது அச்சத்தைக் கதறல் மூலமாகக் குறைத்து விடும் நோக்கத்தோடு மேலும் குரல் எடுத்துக் கத்தினான்.

கட்டில் இருந்து விடுபடும் நோக்கத்தில் கைகால்களை வலுவாக அசைத்துப் பார்த்தான். விடுபட முடியவில்லை. தளர்ந்தவனின் காதில் அந்த சத்தம் கேட்டது. யாரோ நடந்து வரும் ஒலி.

ஹலோ, யாரு? என்னைக் காப்பாத்துங்க", ராம்கோபால் கண்கள் வரும் ஆளைத் தேடி அலைபாய்ந்தன. அந்த உருவம் மெல்ல நடந்து, குண்டு பல்பின் வெளிச்சத்திற்கு வந்தது. ராம்கோபால் வெளிறினான். உடல் முழுவதும் ஆடை பூண்டு முகத்தில் முகமூடி அணிந்திருந்த உருவம் அந்த அரைகுறை வெளிச்சத்தில் அசிங்கமாய்த் தெரிய, ராம்கோபால் மிரண்டான்.

ஏய்.. யார் நீ எதுக்காக என்னை இங்க கட்டிப்போட்டு வச்சிருக்க.? உனக்கு என்ன வேணும்.?” பதில் சொல்லாத உருவம் அங்கே இருந்த மேஜையில் தான் கொண்டு வந்திருந்த பொருட்களை ஒவ்வொன்றாக வெளியே எடுத்து வைக்கத் துவங்கியது. கத்தி, ரம்பம். ராம்கோபாலுக்கு பயத்தில் வியர்த்தது.

ஏய், என்னை விட்டுடு. நான் உனக்கு என்ன கெடுதல் பண்ணேன்?” ராம்கோபால் பயத்தில் உளற, அந்த உருவம் நீண்ட கத்தி ஒன்றை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து நெருங்கி வரத் துவங்கியது.

ஏய், நோ, நோ, என்னை ஒன்னும் பண்ணிடாத. விட்றுராம்கோபால் கதறத் துவங்க, அருகே நெருங்கிய உருவம் ராம்கோபாலுக்கு வலதுபுறமாய் இருளாகிக் கிடந்த இன்னொரு மூலையை நோக்கி நடக்கத் துவங்கியது. ராம்கோபால் அப்போது தான் கவனித்தான் தன்னைப்போலவே இன்னொருவன் ஒரு நாற்காலியில் கட்டிப் போடப்பட்டிருந்ததை. அவனை நெருங்கிய உருவம் சற்றும் யோசிக்காமல் அவன் வயிற்றில் முழு வேகத்தோடு கத்தியைப் பாய்ச்சியது. “ஆ..." என்று அந்த அறை முழுக்க பயங்கரமான அலறல் ஒன்று எழ, அந்த உருவம் மேலும், மேலும் விசையுடன் கத்தியைப் பாய்ச்சியது.

நோ, நோ...” ராம்கோபால் அலறினான். உடல் கட கடவென நடுங்கத் துவங்கியது. மெதுவாகத் திரும்பிய அந்த உருவம் ராம்கோபாலிடம் நெருங்கியது.

ஏய், யார் நீ? என்னை எதுக்கு இப்படி பிடிச்சி வைச்சுக் கட்டிப் போட்டிருக்க?”, ராம்கோபால் நடுங்கத் துவங்க, அந்த உருவம் பொறுமையாக நடந்து அருகில் இருந்து ஒரு மடக்கு நாற்காலியை எடுத்துக் கொண்டு அவன் எதிரே அமர்ந்து அவனை வெறிக்கத் துவங்கியது. ரத்தம் தோய்ந்த கத்தியை அருகில் வைத்தது.

யார் நீ?” இந்தமுறை உருவம் அவனைப் பார்த்துக் கேட்டது.

ஏய், என்ன விளையாடுறீயா? என்னைக் கடத்திட்டு வந்து கட்டிப் போட்டதும் இல்லாம கேள்வி வேற கேட்டுட்டு இருக்க? யார்றா நீ? உன்னோட மாஸ்க்க கழட்டிட்டுப் பேசுடா?” ராம்கோபால் எகிறினான்.

உஸ்...” என்று வாயில் விரல் வைத்து எச்சரித்த உருவம் சடாரென்று கத்தியை திருப்பி வைத்துத் தொடையில் அடித்தது.

ம்ம்ம்...” வலியில் பல்லைக் கடித்த ராம்கோபாலிடம், இந்தக் கத்தியை நேரா வச்சி மறுபடியும் உன் தொடைல அடிச்சா கத்தி உன் தொடையில கோடு போடும், பின்ன ரத்தம் வரும். பாக்க விருப்பமா உனக்கு? கேட்டதுக்குப் பதில் சொல்லு, யார் நீ?” என்றது உருவம்.

ராம்கோபால்.”

ராம்கோபால். உன்னை எதுக்காக இங்க கடத்திட்டு வந்துருக்கேன்னு தெரியுமா?”

தெரியாது?”

ம்ம், இதைக் கொஞ்சம் பாக்குறீயா?” என்று செல்போனில் ஒரு வீடியோவை ப்ளே செய்தது. ராம்கோபால் பார்க்கத் துவங்கினான்.

நள்ளிரவு.

காமிரா ஆன் ஆகி பதிவு செய்யத் துவங்கிருந்தது. காமிராவின் கோணம், ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவரைக் காட்டியது. அப்படியே கோணம் திரும்பிப் பேய் வேடம் போட்டுக் கொண்டு மறைவில் ஒளிந்து கொண்டிருந்த இன்னொருவரையும் காட்டியது. அந்த நபர் நெருங்க, பேய் வேடம் போட்ட நபர் திடீரென அவர் முன்பு தோன்றி “பே..” என அலற நடந்து வந்த நபர் அரண்டு நெஞ்சைப் பிடித்துக் கொண்டு பின்னால் ஓட, ஓடுகையில் தடுக்கி கீழே விழுந்தார். பேய் வேடம் போட்ட நபர். ஓடிச் சென்று அவரைத் தூக்கி விட்டு விட்டு அவரிடம் ஏதோ சொல்லி காமிராவைக் காட்டி டாட்டா காட்டச் சொல்ல, அவரும் நெஞ்சைக் கையில் பிடித்துக் கொண்டு கையை அசைத்தார். அத்துடன் வீடியோ முடிந்திருந்தது.

முகமூடி உருவம் பேசத் துவங்கியது. “இப்போ நீ பார்த்தது என்னன்னு தெரியுமா.?”

தெரியும். prank show. அதை என்னோட யூடியூப் சேனல்க்காக நாங்க தான் எடுத்தோம். அந்த பேய் வேடம் போட்டிருக்குறது நான் தான்.”

தட்ஸ் குட். உன்னால பயமுறுத்தப்பட்ட அந்த நபர் யார்ன்னு தெரியுமா?”

தெரியாது"

தெரியாத நபரை பயமுறுத்தி வீடியோ எடுக்குறது தப்புன்னு தெரியாதா உனக்கு.”

அது just fun. மக்கள் ரசிச்சுப் பாக்குறாங்க.”

, அப்படியா? viewers அதிகமாக அதிகமாக உங்களுக்கு பணம் கிடைக்கும்ல"

அது ஏதோ கொஞ்சம் கிடைக்கும். Fun மட்டும் தான் முக்கியம்.”

இந்த வீடியோல்ல உன்னால பயமுறுத்தப்பட்டவர் பிறகு என்ன ஆனார்ன்னு தெரியுமா.?”

தெரியாது.” ராம்கோபால் உதட்டைப் பிதுக்கினான்.

செத்துப் போயிட்டாரு.”

what? எப்படி?”

உன்னால பயமுறுத்தப்பட்ட நபர் ஒரு இதய நோயாளி ஏற்கனவே அதுக்காக ஆப்ரேசன் பண்ணிக்கிட்டவரு. அன்னைக்கு வீட்டுக்குப் போனவருக்குக் கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்து போய்ட்டார்.”

இதெல்லாம் எப்படி தெரியும்?”

அந்த நபர் என்னோட அப்பா.” ராம்கோபால் அதிர்ந்தான்.

சாரி ப்ரதர், நான் தெரியாம பண்ணிட்டேன்.”

இல்ல.. நீ தெரிஞ்சு தான் பண்ணுன. இந்த மாதிரி Prank பண்ணா உடல் ரீதியாத் துன்பப்படுவாங்கன்னு தெரிஞ்சு தான் பண்ணுறீங்க. அவங்கபடுற அந்தத் துன்பம் தான் உங்களுக்கு முதலீடே. அப்பதான மக்கள் பாப்பாங்க. இல்லையா?

......”

எங்க குடும்பம் நம்பி இருந்ததே எங்க அப்பாவோட வருமானத்தை தான். எங்க அப்பாவோட இழப்பு எங்க குடும்பத்தைச் சுத்தமாச் சிதைச்சுடுச்சு. என்னோட கனவுகளையும். அதை உன்னால திருப்பித் தர முடியுமா.? அட்லீஸ்ட் உன்னோட சாரி என்னோட அப்பாவ திருப்பிக் கொடுத்துடுமா? அதனால எனக்கு வேற வழி தெரியல. Yes Its My Revenge.!” என்றபடியே அந்த முகமூடி மனிதன் கத்தியை எடுத்துக் கொண்டு ராம்கோபாலை நெருங்கினான்.

நோ.. வேணாம். என்னை விட்டுடு..”

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்

நோயின்மை வேண்டு பவர். இந்தக் குறளுக்குப் பொருள் தெரியுமா உனக்கு?”

......”

தீமை என்பது தீமை செய்பவருக்கே உரியது. தீமையைச் செய்யாதவரே தீமை இன்றி வாழத் தகுதி உடையவர்.” ஆக, நீ வாழத் தகுதி இல்லாதவனா மாறிட்ட.” என்றபடியே கத்தியை ஓங்க,

இல்ல, வேணாம். நான் செஞ்சது தப்பு தான். இனி அப்படி பண்ண மாட்டேன். இனி Prank show எதுவும் பண்ண மாட்டேன். என்ன மன்னிச்சு விட்டுடு.”

நான் புத்தனோ, ஏசுவோ இல்லையே. உன்ன மன்னிச்சு விட்டுட, உனக்குக் கொடுக்குற இந்தத் தண்டனையில மத்த யாருக்கும் prank show பண்ணுற எண்ணமே வரக் கூடாது", என்றபடியே கத்தியை முழு வேகத்தில் செலுத்த, 

நோ...” என்றபடியே ராம்கோபால் அலற...

"Cut… Cut..." என்றபடி எழுந்தார் அந்தக் குறும்பட இயக்குனர்.

"தம்பி, குறள் எல்லாம் மேற்கோள் காட்டுனோம். ஆனா, அவர் செஞ்சதும் தீமைதான். நீ செய்றதும் தீமைதான். அதனால இப்ப குறள் படி காட்சி ஒத்து வரல அதனால ஸீன மாத்துறோம்." காட்சியை விளக்கி விட்டு "Action" எனச் சொல்ல காமிரா ஓடத் துவங்குகிறது.

"ஆ.." என அலறிய ராம்கோபால் கண்ணைத் திறந்து பார்த்தான். தனது கைக் கட்டுகள் வெட்டப்பட்டிருந்தன. நம்ப முடியாமல் முகமூடி மனிதனைப் பார்த்தான். அவன் கால் கட்டுகளை அவிழ்த்து விட்டு விட்டுச் சொன்னான்.

"பயம்மா இருக்குல்ல, சாவுன்னா மனுஷனுக்கு பயம். ஒரு தீடீர் மரணம் கொடுக்குற வலி என்னனு எனக்கு தெரியும். உன்னக் கொன்னு அந்த இழப்பை உன்னோட குடும்பத்துக்கு நான் கொடுக்க விரும்பல. இனி உன்னோட வாழ்நாள் முழுக்க இந்த மாதிரி Prank show பண்ணாத. அதனால என்னை மாதிரியானவங்க குடும்பம் பாதிக்கப்படும். எங்க அப்பாவோட இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது. உன்னை கொல்றது மூலமா அது நேராகாது. வலி எப்பவும் ஒண்ணு தான். னி நீ பண்ணுற Park show  மத்தவங்களைத் துன்புறுத்த கூடியதா இல்லாம அவங்களுக்கு நல்லது செய்யுற மாதிரி இருக்கட்டும். நான் வர்றேன்." என்றபடி நடக்கத் துவங்கிய முகமூடி மனிதனைப் பார்த்து ராம்கோபால் கேட்டான்.

"அப்போ அது?" என்று அந்த இருளடைந்த மூலையைக் காட்ட, "அது வெறும் வைக்கோல் திணிக்கப்பட்ட பொம்மை தான். Just Prank." என்றபடி இருளில் கலந்து மறைந்தான்.

- முற்றும்

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்

நோயின்மை வேண்டு பவர். (320)



திங்கள், 22 ஆகஸ்ட், 2022

அவள் வருவாளா? - மௌவல்

 அவள் வருவாளா?

- மௌவல்



அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி வியாசர்பாடியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் ரூ.14 லட்சம் பணம் பெற்று மோசடி செய்துள்ளதாக, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலிடம் வியாசர்பாடி சாஸ்திரி நகரை சேர்ந்த இந்திரா என்பவர் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து காவல் ஆய்வாளர் ரெஜினா தலைமையிலான விசாரணையில், மேலும் 31 நபர்களிடம் அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அவர் பல லட்சங்களில் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது” டிடிடும் என்ற திடுக்கிடும் பின்னணி இசையோடு செய்தி தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது. 

“அதெப்படி பாலா, இப்படி தேடிப் போய் ஏமாந்து போறாங்க. காசு குடுத்து கவர்மெண்ட் வேலைக்கு ட்ரை பண்றவங்க examலா ஏதும் எழுத வேணாமா?” எனக் கேட்டாள் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டே தன் கணவனுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த தமிழினி.

“யாருக்குத் தெரியும்?, நான் என்னவோ கவர்மண்ட் வேலைக்குப் போற மாதிரி என்ன கேக்குற? நீயும் உன் ப்ரெண்டும் தான கவர்மெண்ட் வேலைக்கு ட்ரை பண்றீங்க” என்றான் பாலா.

“எங்க ட்ரை பண்றது, அதான் ஏதும் பண்ண முடியாம எல்லாம் போச்சே” என்றாள் தமிழினி வருத்தத்தோடு.

“வருத்தப்படாத தமிழ், பாத்துக்கலாம், சர்டிபிகேட் வேற வாங்குறது பத்தி விசாரிச்சேன், ஒரு affidavit notary publicகிட்டேந்து வாங்கணும், என்ன தனித்தனியா ஒவ்வொன்னுக்கும் apply செய்யணும், நேரம் எடுக்கும், ஆனா கிடைச்சுடும், சரியா?” என்ற பாலா, தமிழினியை ஆதரவாகப் பார்த்தான். 

“பாலா, நாளைக்கு நான் அனிதா வீடு வரைக்கும் போயிட்டு வர்றேன், பாத்து ரொம்ப நாளாச்சு” என்ற தமிழினிக்கு இசைவாய்த் தலையசைத்தான் பாலா. 

****

அந்தத் தெருவின் முடிவில் அமைந்திருந்த கடைசி வீடு அது. பார்ப்பதற்குப் பெரிய வீடாக இருந்தாலும் மிகவும் பழைய வீடு போன்று தோற்றமளித்தது. வீட்டின் உட்புறம் சிறிதும் வெளியே தெரியாதவாறு அமைக்கப்பட்டிருந்த அந்தப் பெரிய வாயிற்கதவு உட்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது‌. வீட்டின் முன்னே நின்று கொண்டு பலமுறை அனிதாவிற்குத் தொலைபேசியில் அழைப்பு விடுத்தும் பதில் ஏதும் வராததால், பெரிய இரும்புக் கதவின் தாழ்ப்பாளை வேகமாக அசைத்து ஒலியெழுப்ப, ஒலியோடு துருக்களையும் கொட்டியது அந்தப் பெரிய கதவு. இன்னும் சிறிது வலுமாக தட்டினால் கதவு கழன்றே விழுந்துவிடும் போல் தோன்றியது தமிழினிக்கு‌. கதவின் ஒலிக்குப் பின் நிலவிய அமைதியை “இதோ வரேன் இருடி" என்ற குரல் குலைத்தது. குரல் வந்த திசையை தமிழினி பார்க்க, இரண்டாம் தளத்தில் இருந்த அனிதா கையசைத்துக் கீழே வந்து கொண்டிருந்தாள். 

“ரொம்ப நேரமா வெயிட் பண்றியா தமிழ்” என்று கேட்டுக்கொண்டே கதவைத் திறந்த அனிதா, தமிழினியை நேராக இரண்டாம் தளத்திற்கு அழைத்துச் சென்றாள்.

அனிதாவின் அம்மா பார்வதி, இரண்டாம் தளத்தின் வாயிற்படியில் அமர்ந்திருந்தார். அவரைக் கண்ட தமிழினி மகிழ்வோடு நலம் விசாரித்தாள். சில நிமிடங்களுக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்த பார்வதி, சட்டெனத் தமிழினியின் கைகளைப் பிடித்துக்கொண்டு கண்கலங்கினார்‌

“ம்மா, என்னாச்சும்மா? ஏன் அழுறீங்க?”

“…….”

“தமிழ், முதல்ல நீ உள்ள வா, அப்புறமா அவங்ககிட்ட பேசலாம்” என்றாள் அனிதா சற்றே அதட்டலாக.

“என்ன ஏதுனு கேட்டுட்டு வரேன், கொஞ்சம் பொறுடி” என்றாள் தமிழினி.

“தமிழு, என்னைய ஏதும் கேட்காத, நீ அவகிட்டயே கேளு, அவளே சொல்லுவா” என்றார் பார்வதி தழுதழுத்த குரலில்.

“என்னதான்டி நடக்குது இங்க? ரெண்டு வாரமாப் பாக்க வரதுக்கு போன் பண்றேன். எடுக்கவே மாட்ற. அதான் நீ வீட்ல இருக்கியா இல்லையானுலாம் கேட்காம வந்துட்டேன்” என்றாள் தமிழினி.

“ஊருக்குப் போயிருந்தோம், அதான் பேச முடியல தமிழ்” என்று அனிதா கூற, “ஏன்டி புழுகுற, உண்மையச் சொல்லு. ரெண்டு வாரமா போலிஸ் ஸ்டேஷனுக்கும், வீட்டுக்குமா நடந்துட்டு இருக்கோம்னு” என்றார் பார்வதி.

ஏதும் புரியாது விழித்தபடி, அனிதாவையே பார்த்தாள் தமிழினி.

மேலும் தொடர்ந்த பார்வதி, “இருபத்தஞ்சு லட்சத்தத் தொலச்சிட்டோம் தமிழு. வேலைக்கு ஏற்பாடு பண்ணித் தரதா சொன்னத நம்பித் தான் பணத்தக் குடுத்தோம். ஆனா, அந்தாளு ஏமாத்திட்டான் தமிழு” என்றார் கண்ணீர் மல்க. அனிதாவோ தன் அம்மா சொல்வது ஏதும் காதில் விழாததைப் போல் எங்கோ வெறித்துப் பார்த்தவாறே அமர்ந்திருந்தாள்.

“என்னமா சொல்றீங்க? என்னால நம்பவே முடியல. இருபத்து அஞ்சு லட்சம்னு அசால்ட்டா சொல்றீங்க. நேர்ல போய் என்ன ஏதுனு பாத்தீங்களா? நல்லா விசாரிச்சிங்களாமா?” என்றாள் தமிழினி படபடப்போடு.

“ரெண்டு வாரம் முன்ன தாம்மா நாங்களே news பாத்துத் தெரிஞ்சுக்கிட்டோம். அதுக்கப்புறம் வியாசர்பாடி போலிஸ் ஸ்டேஷன்க்குப் போய் விசாரிச்சப்ப தான் உண்மைனு தெரிஞ்சுது. கம்ப்ளெயின்ட் குடுத்துட்டு வந்திருக்கோம்” என்றார் பார்வதி.

“என்னம்மா நடந்துச்சு? யாருமா இப்படி பண்ணது? எப்படிமா உங்களுக்குத் தெரியும்? நேர்ல போய் ஒரு முறை பாத்துட்டு வருவோமா?” என்று பதட்டத்தோடு பல கேள்விகளை அடுக்கினாள் தமிழினி.

“நான் வேலை பாக்குற ஆபிஸ்ல ட்ரைவரா வேலை பாக்குற வேலு சொல்லித் தான் தெரியும். அவன் தங்கச்சி பொண்ணுக்கு மெட்ரோ ஆபிஸ்ல வேலை கிடைச்சிருக்குனு சொன்னான். ஒரே ஒரு பொம்பளப் புள்ளைய வச்சிருக்க, கஷ்டப்பட்டுப் படிக்கவும் வச்சிட்ட, மேல கொஞ்சம் காசு பணத்த ரெடி பண்ணி ஒரு கவர்மெண்ட் வேலைல உக்கார வச்சிட்டா அவ நல்லா இருப்பால்லன்னு சொன்னான். அவ கல்யாணத்துக்குத் தான் கொஞ்சம் பணத்தை வச்சிருக்கேன், அதையும் தூக்கிக் கொடுத்துட்டு என்னடா பண்றதுன்னு சொல்லிட்டு வந்துட்டேன் தமிழு" என்ற பார்வதி சில நொடிகள் அமைதியானார்.

சட்டென குரலை உயர்த்தி, "அதை இவகிட்ட சொன்னது தான் தப்பாப் போச்சு. அதையே பிடிச்சுக்கிட்டு, கவர்மெண்ட் வேலைக்குப் போயே ஆகணும்னு என்ன பாடாப்படுத்திட்டா தமிழு. கல்யாணத்துக்கு என்னடி பண்றதுன்னு கேட்டா, வேலை கெடச்சிட்டா சம்பாதிச்சிடலாம்மானு சொல்லி என் உயிரை எடுத்துட்டா” என்றார் அனிதாவின் அம்மா வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு.

“ம்”

“மறுநாள் வேலு கிட்ட சொன்னதுக்கு, நீ கவலப்படாதக்கா, தெரிஞ்சாளு ஒருத்தரு மூலமா தான் வேலைக்குப் பேசி முடிச்சோம். இந்த வாரத்துல அவரப் போய் பாத்துட்டு வந்துடுவோம். எதுக்கும் கொஞ்சம் பணத்தைக் கையில வச்சிக்கன்னு சொன்னான்” என்றார் பார்வதி.

“ஏன்டி உனக்கு இந்தத் தேவையில்லாத வேல? கவர்மெண்ட் வேலை வேணும்னா எதாவது exam எழுதி ட்ரை பண்ண வேண்டியதுதான? எதுக்குடி இப்படிலாம்” என்று அனிதாவைப் பார்த்து மிகுந்த கோபத்தோடு கேட்டாள் தமிழினி.

பதில் ஏதும் பேசாது தமிழினியையே வெறித்துப் பார்த்த அனிதா, சில நிமிடங்களில் உள்ளறைக்குச் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டாள்.

தமிழினியும், அனிதாவும் எட்டாம் வகுப்பிலிருந்து ஒன்றாகப் படித்தவர்கள். வகுப்பறையில் அவ்வளவாக யாரோடும் கலந்துவிடாத இருவரும், அந்த கல்வியாண்டின் இறுதியிலிருந்து நட்பில் கலந்தார்கள். அன்றிலிருந்தே இருவரும் இணை பிரியாத தோழிகளாகவும் மாறியிருந்தனர். இருவருடைய குடும்பப் பிண்ணணியும், வாழும் சூழ்நிலையும் பல விதங்கள் ஒத்திருந்ததும் இவர்கள் நட்பின் காரணியாகிப் போனது. இவர்கள் இருவரையும் வேறுபடுத்திக் காட்டியது பணம் மட்டும் தான்.

பத்தாம் வகுப்பில் தேறி, பதினோறாம் வகுப்பு சேர்ந்த போது இருவருக்கும் வேறு வேறு துறைகள் கிடைத்தாலும், பள்ளி தொடங்கிய முதல் நாளன்று தமிழினி இருந்த துறைக்கே வந்திணைந்தாள் அனிதா. மேல்நிலை கல்வியின் இரண்டாண்டு காலம் போதுமானதாக இருந்தது, அவர்கள் நட்பை மேலும் மெருகேற்றிக்கொள்ள. பெரும்பாலும் இருவரும் இணைந்தே காணப்பட்டார்கள், பள்ளி வாழ்க்கையில் இணைந்தே பயணப்பட்டார்கள்.

பன்னிரெண்டாம் வகுப்பில் தமிழினி நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சிப் பெற்றிருக்க, அனிதாவோ கணிதப் பாடத்தில் தேறாது தோல்வியடைந்திருந்தாள். 

காலத்தின் ஓட்டத்திற்கு இணையாக இருவரும் ஒன்றாகப் பயணிக்க நினைத்தாலும், நிகழ்வுகள் முரணாக அமைந்துவிட்டது. குடும்பச் சூழ்நிலை காரணமாக வேலைக்குச் செல்ல தொடங்கிய தமிழினி, தொலைதூரக் கல்வி நிறுவனம் மூலம் மேற்படிப்பைத் தொடர்ந்தாள். மறுதேர்வு எழுதி வெற்றி பெற்ற அனிதா, தனியார் கல்லூரியில் பொறியியல் படிப்பில் இணைந்தாள்.

மூடிய கதவுகளைச் சில நொடி உற்று நோக்கிய தமிழினி, “ம்மா, பணத்தை எப்போ யாருக்கிட்ட கொடுத்தீங்க?” எனக் கேட்டாள்.

“ஒருநாள் உங்க வீட்டுக்கு வந்து போனோமே, அதே நாள் தான்மா பணத்தையும் கொடுத்தோம். வேலு முதல்ல ஒருத்தரக் காட்டுனான். அவனுக்கு 5 லட்சம் அனுப்புனோம். அதுக்கப்புறம் தான் விஜயகுமாரப் பாத்தோம், வேலை முடிஞ்சுடுச்சு, அஞ்சாறு மாசத்துல ஆர்டர் வந்துடும்னு சொல்லி 20 லட்சம் வாங்குனான். சும்மா பேருக்கு exam எழுதச் சொன்னான்மா” என்றார்.

தமிழினிக்குத் திருமணம் முடிந்து ஒன்றரை வருடங்கள் கடந்த நிலையில், எதிர்பாராதவிதமாய் ஒருநாள் அனிதாவை சந்தித்த போது தமிழினி அளவற்ற மகிழ்ச்சி கொண்டாள். இயல்பான நல விசாரிப்புகளுக்கு பின் சற்றே கோபமாய், “ஏன்டி எவ்ளோ நாள் உன் நம்பருக்கு ட்ரை பண்ணேன் தெரியுமா? Switch offனே வந்துச்சு. invitation எடுத்துட்டு வீட்டுக்கு வந்தாலும் ஆளில்ல, அவங்க சொந்த வீட்டுக்கே போய்ட்டாங்கனு சொன்னாங்க. சொல்லிட்டுப் போகக் கூடாதா?” என்றாள் தமிழினி.

“இப்ப இங்க தான்டி இருக்கோம். நீ வீட்டுக்கு வா, பொறுமையா சொல்றேன்” என சொல்லிவிட்டு தன் கைப்பேசி எண்ணைக் கொடுத்துச் சென்றாள் அனிதா.

நீண்ட நாளுக்குப் பின்னான சந்திப்பில், இருவரும் ஒருவரைப்பற்றி ஒருவர் ஆவலோடு அறிந்து கொண்டார்கள். அலுவலகத்தில் நிர்வாகம் தொடர்பான வேலை, அளவான சம்பளம், அன்பான கணவன் என தமிழினி வாழ்க்கை இயல்பாக ஓடிக்கொண்டிருக்க, அனிதாவோ எந்த வேலையிலும் நிலைத்திருக்காது அதிக வருமானத்திற்கான வாய்ப்பைத் தேடி அலைக்கழிந்து கொண்டிருந்தாள்.

“தொடக்கத்துலயே அதிகமா எதிர்பாக்கதடி, experience ஆகணும்ல” என்ற தமிழினியை “உன்ன மாதிரி முட்டாளுங்க தான் குறைவான சம்பளத்துக்கு வேலை பாப்பாங்க” என்று சொல்லிய அனிதாவின் பார்வையில் தெரிந்த ஏளனத்தைத் தமிழினியும் கவனிக்கத் தவறவில்லை. 

அனிதாவின் பேச்சுக்கள் தமிழினிக்குச் சற்றே வருத்தத்தை ஏற்படுத்தினாலும், அதை முகத்தில் காட்டாது, “சரிடி நான் கிளம்புறேன், வீட்டுக்கு அடிக்கடி வாடி" என்று எழ முயற்சித்தாள்.

“என்னடி, உடனே கிளம்பிட்ட” என்ற அனிதாவிடம், “Net centreக்குப் போறேன்டி, examக்கு apply பண்ணணும்” என்றாள் தமிழினி.

சில நொடிகள் சிந்தனையில் ஆழ்ந்த அனிதா, “என்ன exam தமிழ்?” எனக் கேட்டு மீண்டும் தமிழினியை அமரவைத்து, தேர்வு தொடர்பான முழு விவரங்களையும் கேட்கத் தொடங்கினாள். பின், “தமிழ் நானும் அப்ளை பண்றேன்டி, நாம ரெண்டு பேரும் சேர்ந்தே எழுதலாமா?” எனக் கேட்டுவிட்டு, நாளைக்கு அஞ்சரை மணிக்கு நானும் வரேன், நாம சேர்ந்து அப்ளை பண்ணுவோம்” என்றாள்.

மறுநாள் நண்பகலில் தமிழினியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அனிதா, “தமிழ், இன்னிக்கு நாம போக வேணாம். Net centreல apply பண்றதுக்கு நானே எங்க officeல இருக்க systemல apply பண்ணிடுறேன். நீ உன்னோட certificates மட்டும் ரெடியா வை, நானே வந்து வாங்கிக்குறேன்” என்றாள். தமிழினியும் அவளின் அனைத்து சான்றிதழ்களையும் எடுத்து ஒரு பையில் பத்திரப்படுத்தி அலமாரியில் வைத்தாள்.

பார்வதி சொல்லியவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த தமிழினி, சட்டெனத் திடுக்கிட்டவளாய் “ம்மா, என்ன சொன்னீங்க இப்ப? என் வீட்டுக்கு வந்த அதே நாள் தான் அங்க போய்ப் பணத்தை குடுத்தீங்கன்னு தான சொன்னீங்க” என்றாள்.

“ஆமா” என்றபடி புரியாமல் விழித்த பார்வதியிடம், “ம்மா, அப்போ என்னோட mark sheet, TC, certificates எல்லாம் அங்க எங்கேயாவது விட்டுட்டு வந்துட்டீங்களா” என்றாள் தமிழினி சற்றும் பதட்டம் குறையாதவளாய்.

சில நொடிகள் பதிலேதும் பேசாது அமைதியாயிருந்த பார்வதி, யோசித்தவராய் “இல்ல தமிழு, அங்க விட்டுட்டு வந்திருந்தா தெரிஞ்சிருக்குமே” என்றார் தயக்கத்தோடு. மேலும், “இப்படிலாம் நடக்கும்னு நெனச்சுக் கூட பாக்கல தமிழு. ரெண்டு பேரும் எவ்ளோ ஆசையா இருந்தீங்க, நாங்க பணத்த தொலச்சிட்டு நிக்குறோம், நீ certificateங்களத் தொலச்சிட்டு நிக்குற” என்றார் தழுதழுத்த குரலில்.

“நீங்க வீட்டுக்குப் போறீங்கனு நெனச்சு தாம்மா குடுத்தேன்” என்றவளை இடைமறித்து, “இப்ப எதுக்கு அனிதா வாங்குற, இன்னொரு நாள் பாத்துக்கலாம்னு சொன்னேன். அவ கேக்கவேயில்ல தமிழு. உன்கிட்ட சொல்லும் போது தான் எனக்கே தெரிஞ்சுது certificates தொலஞ்ச விஷயம்” என்றார் தமிழினியின் முகத்தைப் பார்க்க இயலாதவராய்.

தமிழினியும், பார்வதியும் பேசிக்கொண்டிருந்த வேளையில், வெளி அறையில் இருந்த அனிதாவின் கைப்பேசி சிணுங்கியது. Vyasarpadi police station என்ற பெயரில் வந்த அழைப்பைக் கண்டதும், பதற்றத்தோடு அனிதாவை அழைத்தார் பார்வதி. அனிதாவோ பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள். சில நிமிடத்திற்குப் பின், கதவைத் திறந்துக்கொண்டு அனிதா வெளியே வருவதற்கும் மீண்டும் கைப்பேசி சிணுங்குவதற்கும் சரியாக இருந்தது. அழைப்பை ஏற்றுப் பேசிய அனிதா, “காலையில பத்து மணிக்கு தானே, வந்துடுறோம் சார்” என்றாள்.

“என்ன அனிதா, நாளைக்கு station வரச் சொல்றாங்களா?” என்றாள் தமிழினி.

“ஆமாடி, சில details கேட்டுருக்காங்க advocateம் பாக்கணும்” என்றவள், “ம்மா, நான் சொல்றத எல்லாம் நைட்டே எடுத்து வச்சிக்கம்மா. ஒரு அக்கவுண்ட் நம்பர் கொடுத்து 5 லட்சம் போட சொன்னாங்கல, அந்த டீட்டேயில் வேணும். அது உன் accountல இருந்து தானே transfer பண்ணோம். FIR copy எடுத்து வச்சிக்க. அப்புறம் நாம அவங்கள நேர்ல பாக்கப் போனப்ப, ஒரு நம்பர் குடுத்தாங்கள அந்த நம்பர் வேணும். நம்ம காச எத்தன பேரு பங்கு பிரிச்சிருக்கானுங்கன்னு தெரில” என்றவள் தமிழினியைப் பார்த்தாள்.

“நான் வேணும்னா உன்னோட வரட்டுமாடி” என்றாள் தமிழினி.

“இல்ல, நான் பாத்துக்குறேன்” என்றவளிடம் “அனிதா, என்னோட certificates பத்தி ஏதும் தெரிஞ்சுதா” எனக் கேட்டாள் தமிழினி.

சட்டென முகம் மாறிய அனிதா, “எங்க மிஸ் ஆச்சுனே தெரிலடி. officeலயும் இல்ல, வேற எங்கேயாவது தொலஞ்சுதானும் தெரில. Officeல நல்லா தேடிப் பாத்தாச்சு, கிடைக்கல. எல்லாருட்டயும் சொல்லி வச்சிருக்கேன். எனக்கென்னவோ கிடைக்குற மாதிரி தெரில. நீ எல்லா certificatesம் இன்னொரு copy கேட்டு apply பண்ணு‌. அதான் நல்லது” என்று சொல்லிவிட்டு கைப்பேசியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றாள்.

அனிதா வெளியே சென்றதும், “இருமா தமிழ், அவ சொன்னத எடுத்து வச்சிட்டு வந்துடுறேன்” எனச் சொல்லிவிட்டு பார்வதி உள்ளறைக்குச் சென்றார்.

தமிழினி செய்வதறியாது அமைதியாக அமர்ந்து கொண்டிருந்தாள். அவளின் எண்ண ஓட்டங்கள் பலவாறாக இருந்தது. “பள்ளி நாட்களில் இருந்தே அவள் அப்படிதான். அவளுக்காக நான் என்ன தான் செஞ்சாலும் அது அவளுக்கு நிறைவைத் தரவே தராது. நான் மத்தவங்ககிட்ட பேசுனா, பழகுனா கூட மூஞ்சிய தூக்கி வச்சிப்பா. இப்பவர இவ மட்டும் தான எனக்கு friend. நான் அவள எவ்ளோ நம்புறேன், நேசிக்குறேன். அவளுக்கு ஒரு நல்லது நடந்தா எவ்ளோ மகிழுறேன். இவளுக்கு மட்டும் ஏன் எப்பவும் என் மேல ஒரு வெறுப்பு இருக்கு. மாறிடுவானு நெனச்சு நெனச்சு நான் ஏமாந்து போறது தான் மிச்சம்” என்று தனக்குள் பேசிக்கொண்டிருந்த தன்னை சற்றே வாயடைத்துவிட்டு, “ம்மா, நான் கெளம்பட்டுமா?” என்று உள்ளறையில் இருந்த பார்வதிக்குக் கேட்குமாறு சற்றே உரக்கக் கேட்டாள் தமிழினி.

“தமிழ், இங்க வாமா, இதை கொஞ்சம் எடுத்துக் குடுத்துட்டுப் போடா” என்றார் பார்வதி உள்ளறையில் இருந்தபடியே.

உள்ளறைக்குச் சென்ற தமிழினியிடம் அலமாரியைச் சுட்டிக் காட்டிய பார்வதி, “தமிழ், இவ இந்த FIR Copyய எதுல வச்சிருக்கானே தெரில. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல. அதோ மேல ஒரு பை இருக்குல, அதை மட்டும் கொஞ்சம் எடுத்துக் குடும்மா “ என்றார்

“எனக்கும் எட்டாதுமா, அந்த chairஐ கொடுங்க” என்ற தமிழினி, “நாளைக்கு அங்க போய் பாத்துட்டு வந்து போன் பண்ணுங்கம்மா, நீங்களாவது என்ன ஏதுனு சொல்லுங்க” என்று சொல்லிக்கொண்டே, நாற்காலியின் மீதேறிய தமிழினி அலமாரியின் மேல் புறத்தில் இருந்த பையை எடுத்தாள்.

“தமிழு, அப்டியே அதுல என்ன இருக்குனு பாரு. வேணாம்னா அங்கயே வச்சிடுவோம்” என்று பார்வதி சொல்லவும், நாற்காலியின் மீது நின்றபடியே அந்த கவரைப் பிரித்துப் பார்த்தாள் தமிழினி. அதன் உள்ளே சில தாள்களும், கூடவே இன்னொரு நெகிழி பையும் இருந்தது. தாள்களை எல்லாம் சரி பார்த்துவிட்டு, தாள்கள் வெளிவராதபடி கவனமாக மடித்து வைக்கப்பட்ட நெகிழிப் பையை பிரித்துப் பார்த்த போது அதில் அவளின் certificateகள் அனைத்தும் இருந்தன. அதனைக் கண்ட தமிழினி, சில நொடிகள் திகைத்து, செய்வதறியாது விழித்து, சிலையென நின்றாள்.

“என்ன தமிழு, அதுல என்ன இருக்கு” என்று கேட்ட பார்வதியிடம், “என்னோட certificates மா” என்று சொல்லி முடிக்கவும், அனிதா அங்கு வரவும் சரியாக இருந்தது.

பார்வதி ஏதும் புரியாதவராய், அனிதாவையும், தமிழினியையும் மாற்றி மாற்றி வெறித்துப் பார்க்க, தமிழினி அனைத்தும் விளங்கியவளாய் அனிதாவை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள்.

தமிழினியை எதிர்கொள்ளத் துணிவில்லாமல், தன் பார்வையை வேறு பக்கம் செலுத்திய அனிதா, ஏதோ சொல்வதற்கு வாயெடுக்க, “வேணாம் அனிதா, நீ ஏதும் சொல்லாத, ப்ளீஸ்” என்று சொல்லிவிட்டு, தன் சான்றிதழ்களோடு அங்கிருந்து புறப்பட்டாள் தமிழினி. அவள் மீண்டும் வருவாள் என்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை அனிதாவிற்கு.

- மௌவல்

குறள்:

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா

பிற்பகல் தாமே வரும்.

விளக்கம் :

முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.



வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

துணைவி - அருள். ஜெ

துணைவி

- அருள். ஜெ





விஜய் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தான். அவனுக்குத் திருமணம் நிச்சயமாகியிருந்தது. எனவே நேரம் கிடைக்கையில் எல்லாம் வரப் போகும் மனைவி எப்படி இருப்பாள் என்று அது தொடர்பான கற்பனையில் மிதந்து கொண்டிருந்தான்.


அவளுக்கு என்னவெல்லாம் பிடிக்கும்? கிரிக்கெட் பிடிக்குமா? பிடிக்குமென்றால், அவளின் பிடித்த ஆட்டக்காரர் யார்? கோலியா? ரோஹித்தா? எனக் கேட்க வேண்டும். என்னைப்போலவே புத்தகம் படிப்பாளா? பொன்னியின் செல்வன் படித்திருப்பாளா? அதைப்பற்றிப் பல மணி நேரம் என்னுடன் உரையாடுவாளா? மனது சலிக்கும் போதெல்லாம் நீண்ட பயணம் செல்வது அவனுக்குப் பிடிக்கும். அவளுக்கும் பிடிக்குமா? பைக்கின் பின்னால் அவளை அமர வைத்து ஒரு நீண்ட பயணம் செல்வது போலக் கற்பனையில் மூழ்கினான்.


அவன் பாலகுமாரன் மற்றும் ஜெயகாந்தன் ரசிகன். அவனது வீட்டறையில் அவர்களின் புத்தகங்கள் நிறைந்து கிடக்கும். வருபவளும் அவர்களின் ரசிகையாக இருந்து விட்டால் எப்படி இருக்கும்? அட. நினைத்தாலே இனித்தது.


பள்ளி, கல்லூரியில் கிரிக்கெட், கவிதை மற்றும் கதைகள் எனப் போட்டிகளில் கலந்துகொண்டு தான் வாங்கிய பாராட்டுப் பத்திரங்கள் மற்றும் கோப்பைகளைத் தூசு தட்டி அடுக்கி வைத்தான். வருபவள் கேரம்போர்ட் மற்றும் செஸ் விளையாட்டில் ஆர்வமுடையவளாக இருந்து விட்டால்? இருக்கட்டும் என அதையும் வாங்கி வைத்தான். 


ஒரு நன்னாளில் திருமணம் முடிய, விருந்து அது இது என புதுமணப் பரபரப்பு ஒருவழியாகக் குறைந்து ஒரு மாதம் கழிந்தது. இப்போது மனைவி கமலாவுடன் மனம் விட்டுப் பேச நேரம் கிடைத்தது. பல காலமாகத் தேக்கிவைத்த எதிர்பார்ப்போடு அவளிடம் பேச்சு கொடுத்தான்.


“கமலா?”

 

“ம்ம்ம்...”


“உனக்குப் பிடிச்ச எழுத்தாளர் யார்?”

 

“எழுத்தாளரா? அப்படின்னா?”

 

“அதான் இந்த சிறுகதை நாவல்லாம் எழுதுவாங்களே அவங்க.”

 

“ச்சேச்சே.. எனக்கு அதெல்லாம் பிடிக்காதுங்க. எந்த புக்கும் படிச்சது இல்ல.” 


விஜய்க்கு சப்பென்று ஆகிப் போனது.

 

“எந்தப் புத்தகமும் படிச்சது இல்லையா?”

 

“நான் ப்ளஸ் டூ படிச்சப்போ பாடப் புத்தகம் படிச்சது. அதுக்குப் பின்ன எந்த புக்கும் படிச்சதே இல்ல.”


“இந்த ஆனந்த விகடன், குமுதம், குங்குமம் கூடவா படிச்சதில்ல?” என்றதும் கேட்டிராத நகைச்சுவையைக் கேட்டது போலக் கலகலவெனச் சிரித்தவளைக் கண்டு கடுப்பான விஜய் அந்த இடத்தைவிட்டே வெளியேறினான்.


மண்டை காய்ந்து போனது அவனுக்கு. அலமாரியில் இருந்த புத்தகங்களைத் திரும்பிப் பார்த்தான். புத்தகங்களும், புத்தகங்களுக்கு நடுவே பாலகுமாரனும், ஜெயகாந்தனும் அவனைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரிப்பது போலப்பட்டது.


தான் வாங்கிய பரிசுக் கோப்பைகளை எல்லாம் அழகாக அடுக்கி அவள் பார்வையில் படும்படிதான் வைத்திருந்தான். ஏதோ பொம்மையைப் பார்ப்பது போல அவள் அதைக் கண்டு கொள்ளவே இல்லை. 


ஒரு நாள் வேறு வழி இல்லாமல் கூப்பிட்டுச் சொன்னான்.


“ஏய், இதெல்லாம் நான் வாங்கினது தெரியுமா.?”

 

“எதுக்கு வாங்குனீங்க.?”


“இது கிரிக்கெட் போட்டியில நான் வாங்கினது. இது காலேஜ் கவிதைப் போட்டியில. ஆமா, உனக்குக் கிரிக்கெட் பிடிக்குமா.?”


“ச்சே... எங்க வீட்ல எல்லாரும் பாப்பாங்க. ஆனா எனக்குப் பிடிக்காது.” 


'அதுசரி. எனக்கு இப்படித்தான் வாய்க்கணும்ன்னு இருக்கும்போது உனக்கு எப்படி கிரிக்கெட் பிடிக்கும். எல்லாம் என் நேரம்' என மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.


“சரி, அத விடு, உனக்கு என்ன பாட்டு பிடிக்கும்.”


“இதுன்னு சொல்லமுடியாது, எல்லா பாட்டும் கேப்பேன்.”

 

"நான் எஸ். ஜானகியம்மாவோட பெரிய ரசிகன், தெரியுமா?”


“அது யாரு.? அந்தக் கிழவி மாதிரி இருக்குமே அதுவா?” 


விஜய் நொந்து போனான்.


கொஞ்சம்கூட தனது ரசனைக்கு ஒத்துவராத மனைவி கிடைத்ததை நினைத்தாலே பற்றிக்கொண்டு வந்தது. கணவன் மனைவி என்றால் இரட்டை மாட்டு வண்டி போல இரண்டு மாடுகளும் சரியாகச் சென்றால்தானே குடும்பம் நடக்கும்? ஒரு மாடு சுணங்கினாலும் வண்டி சரியாகப் போகாது. பேசாமல் இவளையும் வண்டியிலேயே ஏற்றிக்கொண்டு ஒத்தை மாடாகவே ஓட வேண்டியதுதான் என ஒரு முடிவுக்கு வந்தான்.


தனக்கு மிகப் பிடித்தமான கிரிக்கெட் விளையாட்டுப் போட்டி நடந்து கொண்டிருக்கும் போது டிவி ரிமோட்டைப் பிடுங்கி வைத்துக் கொண்டு அம்மாவுடன் சேர்ந்து டிவி நாடகங்களை ரசித்துக் கொண்டிருந்த மனைவியைக் கண்டு கோபமாகக் கூட வந்தது. தனது ரசனைக்குள் வராத மனைவியைக் கண்டு பல நேரங்களில் வெறுப்பாக வந்தது. அவளோடு மனம் ஒன்றிப் பழக முடியவில்லை. இதுவே ஒரு கடும் தலைவலியாக மாறிப்போனது அவனுக்கு. இவளைத் திருமணம் செய்து தன் வாழ்க்கையை வீணடித்துக்கொண்டோமோ என்று வேதனையாக இருந்தது. யாரிடமும் இதைச் சொல்லவும் முடியாமல் நிம்மதியாக வாழவும் முடியாமல் வெறுமையில் இருந்தான். 


எந்த எதிர்பார்ப்புமின்றிக் குத்துமதிப்பாக நாட்கள் கடந்து போகத் துவங்கின. சில மாதங்களில் கமலா கருவுறவே, வீட்டில் மெல்ல மெல்ல மகிழ்ச்சி தலை தூக்கியது. ஆளாளுக்குக் கமலாவைத் தாங்கிப் பிடிக்கத் துவங்கினர். விஜய் மகிழ்ந்தான்.


“ஏன்டா. பிள்ளைத்தாச்சி பொண்ணு ஆசைப்பட்டு எதைக்கேட்டாலும் மறுக்காம வாங்கித்தரணும் தெரியும்ல?” என அம்மா சொன்னதைக் கேட்டு மனைவியிடம் சென்றவன்,


“கமலா, உனக்கு பிடிச்சது ஏதாவது கேளு வாங்கித் தர்றேன்.” என்றான்.


“ஆமா, உங்களுக்குப் பிடிச்சதெல்லாம் என்கிட்டக் கேட்டீங்களே, ஆனா, எனக்கு என்ன வேணும்னு நீங்க கேட்க, பாப்பா வர வேண்டியிருக்குல்ல" என்று கமலா சொல்ல, சுருக்கென்றது விஜய்க்கு.


அவன் முகம் உறைந்ததைக் கவனித்த கமலா, "சும்மாதான் கேட்டேன். எனக்குத் தையல் துணியும், ஊசி நூல்கண்டும் வேணுங்க. நம்ம வீட்ல இருக்குற தையல் மிசினக் கொஞ்சம் சரி பாக்கணும். மோட்டர் போட்டுக் கொடுங்க, போதும்”  என்றாள். 


“இதுவா? இதெல்லாம் எதுக்கு?”


“நம்ம குழந்தைக்கு நானே துணி தைக்கலாம்னுதான்”


“சரிம்மா. அப்படியே பண்ணிருவோம். மறுநாளே மெசினைத் தூக்கி சரி செய்யக் கொடுத்து விட்டு, அவள் கேட்ட பொருள்களை எல்லாம் வாங்கித் தந்தான். அடுத்தநாளே மிஷின் சத்தம் கடகடவென கேட்கத் துவங்கி விட்டது.


மனைவி நெய்த துணிகளை எடுத்துப் பார்த்தான். அத்தனை அழகாய் இருந்தது. உடையில் கைவேலையாக செய்த அலங்காரங்கள் அத்தனை அருமையாக இருந்தது.


“ஏய்... இதெல்லாம் உனக்குத் தெரியுமா?”

 

“எனக்குக் கிரிக்கெட்டும், ஜெயகாந்தனும் தான் தெரியாது, இதெல்லாம் தெரியும்” அவள் சிரித்துக் கொண்டே சொன்னபோது  விஜய் தன் தவறை உணர்ந்தான். 


இப்போது தான் ஒவ்வொன்றாக கவனிக்கத் துவங்கினான். வீட்டின் பூஜை அறை அத்தனை அழகாக ஊதுபத்தி சாம்பல் கூட இல்லாது தூய்மையாகக் கடவுள் படங்களுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. முன்பு ஒழுங்கற்று இருந்த வீடு அங்கங்கே சில இயற்கைக் காட்சிப் படங்கள் மாட்டப்பட்டு நேர்த்தியாக இருந்தது.


தினசரி வாசல் தெளிக்கப்பட்டு விதவிதமான கோலங்கள் கமலாவின் கைவண்ணத்தில் போடப்பட்டு மிக அழகாய் இருந்தது.


மனைவியின் கைப்பக்குவ சமையல் கூடக் குறை சொல்ல முடியாத அளவு சுவையாய் இருந்தது.


எத்தனை பெரிய தவறு செய்திருக்கிறோம். எப்போதும் தன்னைப் பற்றியே யோசித்துக் கொண்டு மனைவிக்குப் பிடித்தது பற்றி இதுவரை யோசிக்காமல் இருந்து விட்டது குறித்து வெட்கமாய் இருந்தது. கமலாவிடம் மனதால் மேலும் நெருங்கத் துவங்கினான்.


வளைகாப்பு முடிந்த சில மாதங்களில் அழகான பெண் குழந்தையைப் பெற்றாள். 


கிழிந்த நாராய்க் கிடந்த மனைவியை மருத்துவமனையில் சென்று பார்த்த போது விஜய் நெகிழ்ந்து போனான். தன் பொருட்டு வலி தாங்கி இன்னொரு உயிரை பெற்றுக் கொடுத்த மனைவி மீது பெருங்காதல் வந்தது. 


சில நாட்களில் வீட்டுக்குக் கூட்டி வந்து விட்டார்கள். குழந்தையைக் காண வரும் பெரியோரைக் கண்டு மரியாதை நிமித்தமாய் தனது உடல் நலனைப் பாராது எழுந்து வரவேற்க, பெரியோர்கள் விஜயிடம் கமலாவைப் புகழ்ந்தார்கள். விஜய் தனது மனைவியைப் பற்றி பெருமை கொண்டான். 


தாய்மையைத் தன் தாயிடம் உணர முடிந்தது. ஆனால் தாய்மை என்றால் என்ன என்பதை மனைவியிடம் தான் அதிகமாக கற்றுக் கொள்ள முடிகிறது என்பதைப் புரிந்ததும் கமலாவிடம் ஒரு மரியாதை ஏற்படத் துவங்கியது. வீட்டு வேலை, குழந்தை வளர்ப்பு என பம்பரமாக சுற்றிச் சுழலும் அவளின் சுமை புரிந்தது. 


துவக்கத்தில் கமலாவிடம் தங்களுக்கிடையே கெமிஸ்ட்ரி வேலை செய்யவில்லை என்று நினைத்தான். இப்போது அவர்களுக்கிடையே வேதியியல், இயற்பியல், விலங்கியல் எல்லாமே வேலை செய்கிறது.


இப்போதெல்லாம் விஜய் மனைவியின் பாரம் குறைக்கும் பொருட்டு, தன்னால் இயன்ற வேலைகளைச் செய்கிறான். வீடு கூட்டுவது, பாத்திரம் கழுவுவது, துணிதுவைப்பது என எதுவும் பெண்கள் தான் பார்க்கவேண்டும் என்பதில்லை இவையெல்லாம் வாழ்வியல் வேலைகள் அனைவரும் செய்யவேண்டும் என்ற பக்குவம் வந்துவிட்டது. 


தனது விருப்பங்கள் மட்டுமே முன்னுரிமையாகப் பார்த்த கண்களுக்குக் கமலாவின் பார்வையும் விருப்பங்களும் புலப்படத் தொடங்கியது. வீட்டு வேலைகள், குழந்தை வளர்ப்பு, இது போகத் தன்னையும் கவனித்துக் கொள்ளும் கமலாவிற்கு முன், பாலகுமாரனும், ஜெயகாந்தனும், புத்தகங்களும் கிரிக்கெட்டும், எஸ். ஜானகியும் ஒன்றுமே இல்லை எனத் தோன்றியது விஜய்க்கு. தன்னுடன் வாழும் சக உயிரின் வலியும், வேதனையும், உரிமையும், உண்மையும் புரிந்தபின் வேறென்ன வேண்டும் மகிழ்வதற்கு?


குறள்:


தன்னுயிர்க்கு ஏன்னாமை தானறிவான் என்கொல்லோ

மன்னுயிர்க்கு இன்னா செயல்.


விளக்கம்:


தனக்கு இது துன்பம் தருவது என உணர்ந்தவன் மற்றவர்க்கு அதைச் செய்வது என்ன காரணத்தால்?