சனி, 10 நவம்பர், 2018

44. தூய நெஞ்சம்

தூய நெஞ்சம்



செல்போன் அலாரம் தனக்கு உரித்த நேரமான 5.30 மணிக்கு கத்த துவங்கியது கண்களை கசக்கிய படியே, அலாரத்தை அணைத்தான் அசோக்; ஓசை கேட்டு அவன் மனைவி காவியா கண்களைத் திறக்காமலே திரும்பிப் படுத்துக் கொண்டாள். படுக்கையை விட்டு எழுந்த அசோக், தூக்க கலக்கத்தோடு குளியறைக்குள் புகுந்துகொண்டான்.

அசோக் கத்தார் நாட்டில் உள்ள  அரசாங்க உதவி பெறும் தொலைதொடர்பு சேவை நிறுவனம் ஒன்றில் சேவைத்தர பிரிவில் தலைவனாக உள்ளான்; வெகு விரைவிலேயே அவனுக்கு இந்த உயர் பதவி கிட்டியிருக்கிறது காரணம் அவனது நேர்மை மற்றும் இன்ன பிற. 

வீட்டில் பார்த்த காவியாவை கல்யாணம் செய்துகொண்டு, கம்பெனி வழங்கிய புது பிளாட்டில் குடிபெயர்ந்து 5 மாதங்கள் ஆகிறது. காவியாவைப் பற்றியும்  அசோக்கைப் பற்றியும் விரிவாகத் தெரிந்து கொள்வதற்குள், குளித்து விட்டு வரும் அசோக்கைப் பின்தொடருவோம்.

வெளியே வந்த அசோக், காவியா இன்னமும் படுக்கையில் இருப்பதைக் கண்டு வியந்தான். எப்பொழுதும் தன்னுடனே எழுந்து குளித்து வரும் தனக்குத் தர வேண்டி, ஆவி பறக்க காபி கோப்பையோடு எதிரே காட்சியளிக்கும் காவியா, இன்று எழாமல் இருப்பதன் காரணம் நேற்று நடந்த நிகழ்வாகத்தான் இருக்கும் என்று யூகித்துக்கொண்டான். இரவு நினைவலைகளோடு அசோக் சமையலறைக்குள் நுழைந்தான். 

காவியா –  புத்துலக மங்கை… உலகத்திற்கு ஏற்ப தன்னை எப்போதும் புதுப்பித்து மெருகேற்றிக் கொள்பவள்… Very Practical… அசோக் – அவனும் புத்துலக இளைஞனே!! ஆனால், இன்னமும் மனசாட்சிக்குப் பயந்து நடப்பவன். ஏதோ ஒரு புள்ளியில் இருவரும் ஒத்துப்போய் அவர்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதே…!!

நேற்று நடந்ததைப் போல் அவர்களுக்குள் சிறுசிறு சண்டை எப்படியேனும் வாரம் ஒரு முறை வந்துவிடும். தவறு இருவர் மேலும் உள்ளது. ஒரு சமயம் அலுவலகப்பணிகள் பற்றி காவியா கேட்க – அசோக் ஆர்வமாக அவளுக்கு எல்லாவற்றையும் கூறினான்.

ஆஃபிஸில் உள்ள மற்ற ஸ்டாஃப்ஸ் முடிந்த வரை மேலதிகாரியை ஏமாற்றி ஏதோ ஒரு வகையில் லாபம் அடைகிறார்கள்; தனது கணவன் மட்டும் முட்டாளாய் இருந்து வருகிறான் என்று வெகு விரைவாகத் தெரிந்து கொண்டாள்; நிறைய முறை அசோக்கிடம் இது குறித்து பேசி அவனைத் துளைத்தெடுப்பாள்… நேற்றும் அதே போல்,

“எனக்கு புடிக்காத விஷயம்… என் மனசுக்கு ஒப்பாத காரியங்கள என்ன திரும்ப திரும்ப செய்ய சொல்ற… நானும் உனக்காக ரெண்டு மூனு தடவ செஞ்சிப்பாத்தேன்… என்னால நிம்மதியா இருக்க முடியலை, மனசாட்சி உறுத்துது… இந்த காலத்துல இப்படி கூட முட்டாளா இருப்பாங்களானு நீ கேக்கற? நா இப்படி தா!! மத்தவங்க அப்படி இருக்கங்காங்கறதுக்காக என்னால அவங்க மாதிரிலாம் இருக்க முடியாது”

கண்களை இருக்கியபடி அவன் கூறுவதை கேட்டுக்கொண்டிருந்த காவியா, ”ஒடனே கோவப்படறதுல ஒன்னும் குறைச்சல் இல்ல!! கம்பெனில நல்ல எடத்துல இருக்குடா ரொம்ப இல்லாட்டியும் சிக்கல் இல்லாம வரதையாச்சும் ஏன் வேணான்னு சொல்ற…? ஏன் இப்படி புரிஞ்சிக்காம இருக்க…? நமக்கு  இல்லாட்டியும் அடுத்து வர நம்ம குழந்தைங்களுக்கு ஆகும்டா”

“அப்படி சேத்துற எந்த பொருளும் நமக்கோ, நம்மள சுத்தியிருக்கறவங்களுக்கோ எந்த நிரந்தர மகிழ்ச்சிய தந்துடுமா…? தப்பு பண்ணிட்டு பயந்து பயந்து வாழ விரும்பல… புரிஞ்சுக்கோ…” கோபத்தை அடக்கியபடியே அசோக் பதில் அளித்தான். 

இப்படியே அவர்கள் வாக்குவாதம் சண்டையாக மாறியது; ஒரு  கட்டத்திற்கு மேல் பொறுக்காத அசோக் பேசி பயனில்லை என்று அவ்விடத்தை விட்டு அகன்று விட்டான்.  குக்கர் விசில் எழுப்ப, நேற்றைய நினைவில் இருந்து மீண்ட அசோக் துரிதமாக அன்றைய சமையலை செய்து விட்டு அலுவலகம் சென்று விட்டான்.

எனினும் அவன் மனது முழுவதும் காவியா எப்படியும் சமாதானம் ஆகி விடுவாள் என்றே எண்ணமே ஆட்கொண்டிருந்தது.

5 நாட்கள் பின் வந்த ஒரு வெள்ளி அசோக்கிடம் காவியா, “ஊருக்கு போறேன் அசோக்… நாலைஞ்சு மாசம்  இருந்திட்டு வரேன்” என்றாள் தெளிந்த முகத்தோடு .

“உன் விருப்பம் காவியா; நீ எப்படியும் என்ன புரிஞ்சிப்பேனு எனக்கு நம்பிக்கை இருக்கு…” அசோக் தீர்க்கமாகப் பதில் உரைத்தான்.முகத்தில் தோன்றிய புன்னகையை மட்டும் அவனுக்கு உதிர்த்து விட்டு இந்தியா வந்தடைந்தாள்.

பெற்றோரோடு இருந்தால் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி மாளாது என்று தன் கல்லூரித் தோழியின் அறையில் தங்கினாள். அந்த தோழி மூலமாகவே புதிதாக துவங்கிய நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தாள். 

சேர்ந்த மூன்று மாதத்திலே நல்ல பெயர் எடுத்த காவியாவிடம் சில பிரிவுகளுக்கு முடிவெடுக்கும் அதிகாரமும் கொடுக்கப்பட்டது. அவ்வப்போது அசோக்கிடம் போனில் பேசிக்கொள்வாள். அசோக்கும் நன்றாக வேலை பார்க்கும் படி ஊக்குவிப்பான்.

அலுவலகத்தில் எல்லோரிடமும் நட்பாக காவியா பழகினாலும், மற்றவர்கள் அவளை  அப்படி எண்ணவில்லை!! “சிக்கியது ஒரு இளிச்சவாயன்” என்று தான் செய்ய வேண்டிய வேலைகளை இவள் தலையில் கட்டினார்கள்; அதை பொருட்படுத்தாமல் 2 மாதம் வரை அயராது உழைத்து எல்லா வேலையும் செய்தாள்.

போக போக மனமும் உடலும் முடியாமல் போக, பணியில் கவனம் செலுத்த முடியாமல் தடுமாறினாள்… வறட்டு கௌரவம் பார்த்து வேலையையும் விட அவளுக்கு மனமில்லை. விளைவு, வேலையில் பிழைகள்… முன்னர் அவளது வேலைகளில் தெரிந்தே தவறு நடக்கும் போது மாட்டிக் கொள்ளாதவள், மற்றவர்களின் வேலையைச் செய்த போது வந்த தவறால் மேலதிகாரியிடம் கெட்ட பெயர் எடுத்தாள்; சகஊழியர்கள் சுமத்திய வீண்பழி இப்படி எல்லாம் ஒன்றாக பாவம் காவியாவை சூழ்ந்துகொண்டது. இதுகுறித்து நண்பர்களிடமோ, அசோக்கிடமோ கூட சொல்ல தோன்றவில்லை அவளுக்கு.

“ஒருவரின் மனம் துவண்டு போயோ, சோர்வுற்றோ வருத்தத்தில் இருக்கும் போது தான் முன்னர் செய்த தவறு  அவர்கள் மனதில் பெரிதாக தெரியும் என்பார்கள்..!”கிட்டத்தட்ட அதே நிலையில் தான் காவியா… அசோக்கிடம் தான் போட்ட சண்டை அனைத்தும் அவள் நினைவில் வந்து அவளை மேலும் வாட்டியது.

அடுத்து வந்த நாட்களில் அதிகம் யோசிக்காமல் தெளிவான முடிவை எடுத்திருந்தாள். வேலை செய்த கம்பெனியின் உயரதிகாரிக்கு மெயில் மூலம் பணிவிலகல் கடிதம் அனுப்பினாள்; அடுத்து செய்ய வேண்டியவற்றைத் துரிதப்படுத்தினாள்.

7 நாள் கழித்து…. இப்போது நாம் பார்ப்பது நன்றாக வளர்ச்சி பெற்ற கத்தார் நகரம் ஏர்போர்ட் விட்டு வெளியேறி டாக்ஸியில் வீட்டிற்கு சென்றாள் காவியா. 

வீட்டின் கதவைத் திறந்த அசோக்கிற்கு இன்ப அதிர்ச்சி!! இப்படி சொல்லாமல் கொள்ளாமல் காவியா வருவாள் என்று அவன் எதிர் பார்க்கவில்லை.!!

உள்ளே வந்த காவியா கொஞ்சமேனும் தாமதிக்காமல் அசோக்கை ஆற தழுவிக்கொண்டாள்; அதுவரை கண்களில் தேங்கி இருந்த கண்ணீர் வெளியே வரத் துவங்கியது; அசோக்கை தழுவியபடியே தானாக பேசிக்கொண்டாள் அவனுக்கு கேட்காத வண்ணம், ‘சாரிடா அசோக்..! நா செஞ்சது தப்புடா..! இனி உன் வேலை சம்பந்தமா நா ஏதும் கேட்கமாட்டேன்… நீ உன் மனசு போலவே இரு! நீ சம்பாதிக்கறது போதும்டா நமக்கும், நம்மள சுத்தி இனி வரபோற இந்த சமூகத்துக்கும்; பொது சொத்துக்கு  ஆசைப்பட்டு பழி பாவம்லா ஏத்துக்க  என்னால முடியலடா; அந்த கஷ்டம் என்னோட போகட்டும்…’ என நினைத்தவள், அசோக்கை விட்டு விலகி, கலங்கிய கண்களோடு,

“உனக்கு கஷ்டம் ஏற்பட்டிருந்தாலும் எனக்கு அது பெருசா தெரிஞ்சிருக்காது!! ஆனா, காலம் சரியா எனக்கே மண்டைல அடிச்சி உணர்த்திருச்சு அசோக்!!”.  இவள் என்ன கூறுகிறாள் என்று புரியாமல் குழப்பப்பார்வை பார்க்கும் அசோக்கை பார்த்து, அழுகை மீறி சிரித்தாள் காவியா.  

குறள்:

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.  

விளக்கம்: பொருள் தேடும்போதுபாவத்திற்குப் பயந்து தேடியபொருளை உறவோடு பகிர்ந்து உண்ணும் இல்வாழ்பவனின் பரம்பரை 
ஒருக்காலும் அழிவதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக