அப்பத்தா
நிர்மலாவின் மொபைல் அதிர்ந்து உறுமியது, எடுத்து "சொல்லு எரும, எப்ப வர்ற?" என்றாள்.
எரும என்கிற கார்த்திக், நிம்மியின் தம்பி. "காலைல வந்திடுவேன் க்கா, மாமாவுக்கு கால் பண்ணேன் எடுக்கல, விஜிக்கு எதாச்சும் வேணுமா?"
"பெரிய மனுசா... நீங்க சும்மா வந்தா மட்டும் போதும், ஸ்வீட் வாங்கறேன்னு காசெல்லாம் வேஸ்ட் பண்ணாத, இங்க விஜி ரெண்டு நாளா இருமிட்டு இருக்கா".
"சரிக்கா..."
காலையில், "வா கார்த்திக்" என வரவேற்றார் மாமா.
"என்னடா ஆளு வளர்ந்துட்டே போற...?" என்றாள் நிம்மி.
"கண்ணு வைக்காத நிம்.. சாரி அக்கா" என்றான்.
திருமணத்திற்குப் பின் அக்காவை பெயர் சொல்லி அழைப்பதில்லை, இருப்பினும் பழக்கத்தில் அவ்வப்போது வாய் தவறிடும்.
குளித்து வந்தவன், "அக்கா, சாமி எங்க கும்பிடுறது?" என்றான். "அடேய்... என்னடா அநியாயத்துக்கு நல்லவனா மாறிட்ட, மாமா முன்னாடி சீன் போடுறியா?" எனச் சிரித்தாள் நிம்மி.
பதிலுக்கு, சிரிப்போடு "என்னக்கா, சாமி கும்பிட்டா அன்னிக்கு நாள் பாஸிடிவ்வா இருக்க மாதிரி தோணும், அவ்ளோதான்" என்றான்.
சாப்பிட அமர்ந்தபோது, "அப்புறம் கார்த்திக் ஜாபெல்லாம் எப்படி போகுது?" என்றார் மாமா.
"ஜாபா...? அத ஏன் மாமா கேக்கறிங்க, ஊர் பக்கம் இஞ்சினியருக்கு என்னத்த வேல, ஒன்னு மார்க்கெட்டிங், இல்லனா எதாச்சும் வண்டி வாங்கி போட்டு ஓட்டணும், எனக்கு ரெண்டும் செட்டாகல... அப்படியே சுத்திட்டு இருக்கேன், அடுத்து இங்க வந்துதான் வேலை தேடணும்" என்றான்.
மாமா முகத்தில் முன்பிருந்த சிரிப்பு காணாமல் போயிருந்தது... "சரி கார்த்திக் நான் கிளம்பறேன், ஈவ்னிங் மீட் பண்ணலாம்" எனக் கிளம்பினார் மாமா.
"ஏன்டா மாமாகிட்ட இப்படித்தான் பேசுவியா, அவருக்கு சும்மா சுத்தறது, டைம் வேஸ்ட் பண்ணுறதே பிடிக்காது..." நிம்மி சன்னமான குரலில் ஆனால் அதட்டும் விதமாக கேட்டாள்.
"அப்போ அவரு கம்பெனில ஒரு வேல வாங்கித் தர சொல்லு..."
"க்கும்... அவரு ஐஐடிலயே கோல்டு மெடல் வாங்கினாலும், ரெஃபர் பண்ண மாட்டாரு" என்றாள் நக்கலாக.
'ஐஐடில கோல்டு மெடல் வாங்குறவன் ஏன் ரெபரென்ஸ் கேக்கறான்' என மனதில் நினைத்துக்கொண்டு கார்த்திக்கும் சிரித்தான்.
"அப்புறம், நானே கேக்கணும்னு நினைச்சேன், என்ன விசயமா வந்த, நாங்கூட எதோ வேலை விசயமா வந்திருப்பன்னு நினைச்சேன், நீ பேசறத பாத்தா அப்படி தெரில, என்னடா எதும் பிரச்சினையா?"
"பிரச்சினைலாம் இல்லக்கா, மாமா இருக்கும்போதே சொல்லணும்னு நினைச்சேன், நம்ம அப்பத்தாவுக்கு அடுத்த மாசம் சாமி கும்பிடுறோம், நீயும் மாமாவும் வரணும், அதுக்கு அழைப்பு சொல்லத்தான் வந்தேன்"
"டேய் இத போன்ல சொன்னா பத்தாதா, இதுக்காகவா இ்வ்ளோ செலவு பண்ணிட்டு வந்த...?"
"அட... நான் வாட்ஸப்புல சொன்னாலே போதும்னுதான் சொன்னேன், அப்பாதான் பழசையே நினைச்சுட்டு, அப்பத்தாவ உனக்கு ரொம்ப பிடிக்கும், ஒருவேள போன்ல சொல்லி மாமா உன்ன அனுப்பலின்னா, நீ வருத்தப்படுவியோனு தப்பா நினைச்சுட்டு என்ன அனுப்பி வச்சாரு" என்றான் சற்று கடுமையாக.
"இப்ப எதுக்கு இவ்ளோ கோவப்படுற...? இதுக்கெல்லாம் போகணும் சொன்னா மாமா எதாச்சும் சொல்லுவாரேன்னு சொன்னேன்."
"இதுக்கெல்லாம்" என்ற வார்த்தை கார்த்தியைக் குத்தியது. கோவத்தை அடக்கி கொண்டு, "சரிக்கா... நான் போய் வினோத்த பாத்துட்டு வரேன்" எனக் கிளம்பினான்.
"யாருடா வினோத்...?"
"நம்ம சொந்தத்துல, கீதா பெரியம்மா பையன் க்கா, இங்க தான் ஒரு ஹோட்டல்ல வேல பாக்கறான்."
"சரி டா மதியம் சாப்பிட வந்திடு."
மதியம் வீடு திரும்புகையில் வினோத்தும் வந்திருத்தான். அக்காவுக்கு எரிச்சல் என்றாலும் வெளிக் காட்டிக் கொள்ளவில்லை.
"உக்காரு வினோத்..." என்ற கார்த்திக், நிம்மியைப் பார்த்து, "அக்கா... இதுதான் நம்ம கீதா பெரியம்மா பையன்... இன்னிக்கு லீவுன்னு சொன்னான், அதான் நம்ம வீட்டுக்குக் கூட்டி வந்தேன்."
"வாப்பா வினோ... வேலைலாம் நல்லா போகுதா. அண்ணன் வந்தாதா வரணும்னு இல்ல... டைம் கிடைச்சா எப்ப வேணும்னா வா" என்று பொதுவாக சொன்னாள் நிம்மி.
"சரிங்க க்கா" என வினோத் சொல்ல, மையமாகத் தலையாட்டிவிட்டு சமையலறைக்குச் சென்ற நிம்மியைப் பின் தொடர்ந்து, "என்னக்கா... சிரமப் படுத்திட்டனா? அவனும் வரேன்னு சொல்லிட்டான்... தடுக்க முடில... சாரிக்கா" என்றான்.
"விடு கார்த்தி, ஃபுட் ஆர்டர் பண்ணா அரை மணி நேரத்துல வந்திட போகுது" என்றாள் நிம்மி.
"ஆர்டரா ஏன் க்கா வீட்டுல இல்லையா."
"டேய் திடீர்னு வந்தா எப்படிடா? இதெல்லாம் இங்க சகஜம், அவனுக்கும் தெரியும்."
இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை கார்த்திக்கு.
வினோத் தன் நண்பனைப் பார்த்து விட்டு, அப்படியே தன் அறைக்குச் செல்வதாய் சொல்லிக் கிளம்பினான்.
கார்த்தி அபார்ட்மென்ட் பார்க்கில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது அங்கே விளையாடிகொண்டிருந்த ஒரு சிறுவன் ஊஞ்சலில் இருந்து வழுக்கி விழுந்து கையில் அடிபட்டது, இவன் ஓடிச்சென்று தூக்கி "ஒன்னுமில்ல ஒன்னுமில்ல டா கண்ணு" எனச் சமாதானபடுத்த முயற்சிக்க, அதற்குள் அவன் தாய் எங்கிருந்தோ வந்து அந்த சிறுவனை வாங்கிக் கொண்டாள். அப்போதுதான் கவனித்தான் அந்த சிறுவனின் கை ஒடிந்திருந்தது, "அய்யோ" என அலறினாள் தாய். "இருங்க இருங்கமா, உங்க வீட்டுல யாரும் இல்லையா?" என்றான்.
"அவரு ஆபிஸ் போயிட்டாருங்க..." என்றாள் அதிக பதட்டத்தில் இருந்த அந்த குழந்தையின் தாய்.
நேராக, தன் அக்கா ப்ளாட்டுக்கு வந்து தன் அக்காவிடம் வண்டி சாவி கேட்க,
"எதுக்கு டா, நா விஜிய கூப்பிட போகணும்"
"இல்லக்கா அந்த பையன் பாவம் வலில துடிக்கிறான்..."
"டேய் நீ இந்த ஊருக்கு புதுசு, ரொம்ப பதறாத, அவங்க cab புக் பண்ணி போயிக்குவாங்க, நீ சும்மாயிரு..."
"இல்லக்கா அந்த பையனுக்கு நம்ம விஜி வயசுதான் பாவம்..."
"லூசு மாதிரி பேசாத டா... இங்க யாரு என்னான்னு தெரியாமல்லாம் ஹெல்ப் பண்ண முடியாது, மாமா திட்டுவாரு". சுட்டெரிக்கும் பார்வையைத் தன் அக்காவிடம் வீச, அவள் பார்வையைத் திசை திருப்பினாள்.
மனமின்றி மீண்டும் அந்த ஊஞ்சல் இருந்த இடத்திற்கு வந்தான், அங்கிருந்த செக்யூரிட்டி "தம்பி அவங்க cab புக் பண்ணி போயிட்டாங்க பா, நீ பதறாத, ஊருக்கு புதுசா" என்றார்.
"ஆமாண்ணே" என்று வீட்டுக்கு வந்தான்.
நாம்தான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டோமோ என்றெண்ணிக்கொண்டான். அக்கா விஜியை அழைத்து வந்தாள், விஜியுடன் விளையாண்டதில் பொழுது போனது தெரியவில்லை.
மாமாவிடம் தான் வந்த காரணத்தை சொன்னபோது, "இல்ல கார்த்தி... எனக்கு லீவு கிடைக்குமா தெரில, விஜிக்கு எக்ஸாம் வேற வரப்போகுது, அதான் சம்மர் லீவு வரப்போகுதுல்ல அப்போ பாத்துக்கலாம்"
"சரிதாங்க மாமா, அப்பா உங்கள அனுசரிச்சுதான் ஞாயித்துக்கிழமை சாமி கும்பிடுறமாதிரி வச்சிருக்காரு, அதுமில்லாம அப்பத்தாவுக்கு நிம்மியக்கானா உசு.." சொல்லி முடிப்பதற்குள்...
"கார்த்தி வர்ற மாதிரி இருந்தா நீ சொன்னதுமே ஓகே சொல்லிருப்பேன், நீ படிச்ச பையன், கொஞ்சம் அப்பாகிட்ட சொல்லிடு, வேணும்னா நானே கால் பண்ணி சொல்றேன் மாமாகிட்ட" என்று மாமா குறுக்கிட,
"வேணாம் மாமா நான் சொல்லிக்கிறேன்" என்று சொன்னான் கார்த்திக்.
அன்றிரவு ரயிலுக்குக் கிளம்பினான் கார்த்திக். கிளம்பும்போது விஜி இருந்தால் அழுது ஆர்பாட்டம் செய்வாள் என்று மாமா அவளை கடைக்கு அழைத்துச் சென்றார்.
நிம்மி "என்னாடா கண்ணு... கோவமா அக்கா மேல?" என்று வாஞ்சையாய் அவன் தலை கோதினாள்.
"அதெல்லாம் இல்ல க்கா", என்று பார்வையை எங்கோ திருப்பிக்கொண்டான்.
"எனக்கு தெரியும் கார்த்தி உனக்கு கோவம். என் சூழ்நிலைய நொந்துக்கிறத தவிர எனக்கு வேற வழி தெரியல" என லேசாக கண் கலங்கினாள்.
கார்த்தி பேசத்தொடங்கினான். "ஆமாக்கா இந்த சிட்டி லைப் உன்னை ரொம்பவே மாத்திடுச்சு. நீ கல்யாணமாகி வந்தப்போ நம்ம அம்மாவ பிரிஞ்சு போறத நினைச்சு அழுததவிட, அப்பத்தாவ பிரியறத நினைச்சுதான் அழுதேன்னு சொன்ன. ஆனா இன்னிக்கு அவங்களுக்காக சாமி கும்பிடகூட உன்னால வர முடியல... ஏன்? காலைல நான் சாமி கும்பிட்டதகூட நீ ஒரு வேடிக்கையாதான் பாத்த...
நம்ம சொந்தக்காரன் வீட்டுக்கு வந்தா வாழை இலை இல்லாம சோறு போட்டு அனுப்பி பாத்திருக்கியா நீ...?"
"..."
"அதவிடு நம்ம பக்கத்து வீட்டுக்காரன் கைய அறுத்துகிட்டா அவன் கைக்கு வைக்கிற சுண்ணாம்பு நம்ம வீட்டுல இருந்து உடனே போகும் அவ்வளவு பாசம் இருக்கும்..."
"இதெல்லாத்தையும் விட நம்ம மனசு எவ்வளவு சுத்தமா இருந்துச்சு.
ஆனா இந்த சிட்டி வாழ்க்கை இதுதான் நியாயம்னு அநியாயமா ஒன்ன சொல்லி கொடுத்து அதுக்கு நம்ம பழக்கியும் விடுது, எத்தன ரூவா சம்பளம் கிடைச்சாலும் இந்த வாழ்க்கை எனக்கு வேண்டாக்கா..."
"நம்ம தூக்கி வளத்த பெரிசுகள நினைச்சு பாத்து, மனச சுத்தமா வச்சுக்க சாமி கும்பிட்டு, வீட்டுக்கு வர்ற விருந்தாளிக்கு வயிராற சோறு போட்டு, பக்கத்து வீட்டுக்காரனுக்கு எதுனாலும் மொத ஆளா நின்னு, நானும் எனக்கு உண்மையா இருக்க நம்ம ஊரு வாழ்க்கையே போதும்... நான் கிளம்பறேன் க்கா..." என்று பஸ் ஸ்டாப் நோக்கி நடந்தவனைப் பார்த்தபடி நின்றிருக்க, அவள் விழி தேங்கிய நீர் கண்ணிறைந்து வழிந்தோடியது.
குறள்- 5:3
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
விளக்கம்:
இறந்து தென்திசையில் வாழ்பவர், தேவர்கள், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய அறத்தைத் தவறாமல் செய்வது சிறப்பு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக