புதன், 31 அக்டோபர், 2018

7. மனக்கவலை மாற்றல் அரிது

மனக்கவலை மாற்றல் அரிது

பல ஆயிரம் தொழிலாளர்களைக் கொண்ட பாய்லர் தொழிற்சாலை கொஞ்சம் சோம்பேறித்தனமாகவே இயங்கிக்கொண்டு இருந்தது.

நிறைய துறைகள், நிறைய வேலைகள், நிறைய இரும்பு, நிறைய இயந்திரங்கள், நிறைய மனிதர்கள் இப்படி அனைத்தும் நிறைந்திருந்தது ஒரு மனிதனின் மனம் தவிர.

சத்திய நாராயணன் அங்கு குவாலிடி டிபார்ட்மென்டின் ஜிஎம், அவருக்கு கடந்த ஒரு வாரமாக, குறிப்பாக, அமெரிக்காவில் தன் மகன் வீட்டுக்குச் சென்று வந்ததிலிருந்து, ஒரு எண்ணம் மனதை உறுத்திக்கொண்டே இருந்தது.

அந்த உறுத்தலுக்குக் காரணம் அதே டிபார்ட்மென்டில் சாதாரண க்ளார்க்காக இருக்கும் சுந்தரமே. வயது அடிப்படையில் இருவரும் சமமானவர்களே. தொழிற்சாலையில் இருவரும் ஒரே சமயத்தில் வேலைக்கு சேர்ந்தவர்களே, ஒரு ப்ரொமோஷனில் ஹிந்தி சுந்தரத்தைக் கீழே தள்ளிவிட, அது தெரிந்த சத்தியா மேலே அதற்கும் மேலே என சென்றார்.
தருக்கப்படி, சுந்தரமே சத்தியாவை நினைத்து பொறாமையோ, வெறுப்போ கொண்டிருக்க வேண்டும், அது அப்படியே இடம் மாறியிருந்தது, லட்சம் சம்பளம், சொத்து, மகன், மகள், பேரன், பேத்தி என இத்தனை இருந்தும் சுந்தரத்தின் நிறைவான புன்னகை முகத்தின் முன்பு, சத்தியா ஒன்றுமில்லாதவராக நின்றார். 

அமெரிக்காவில் தனது மகன் வீட்டில் இருந்தபோது, "என்னப்பா எப்பவும் ஒரு மாதிரி உம்முனே இருக்க" எனக் கேட்க

"அப்படிலாம் இல்லடா, ட்ராவல் பண்ணி வந்தேன்ல அதுதான்" என்றார் சத்தியா.

"இல்லப்பா நீ அங்கயும் இப்படித்தான் இருக்கியாம், அம்மா சொன்னாங்க, எதும் கவலை இருந்தா சொல்லிடுப்பா, உடம்புக்கு எதும் பண்ணுதா" 

"ச்ச அவளுக்கு வேற வேலை என்ன...? நான் சந்தோஷமாதான் இருக்கேன்" என மழுப்பினார், பின்புதான் அதன் உண்மையை உணர்ந்தார். ஆம், அவர் சந்தோஷமாக இல்லை, ஏன் என அவரையே கேட்டுக்கொண்டார். விடை தான் இல்லை.

காலை டீ ப்ரேக்கில் ப்யூனை அழைத்து, சுந்தரத்தை தனது ரூமுக்கு வர சொன்னார்.

வந்தார் சுந்தரம்.

"வணக்கம் சார்"

"ம்ம் நல்லாருக்கியா சுந்தரம்?"

சத்தியாவை வினோதமாய் பார்த்து "ஏன் சார் நல்லாதானே இருக்கேன், எதும் பிரச்சினையா சார்...?" என்றார்.

"கேன்டீன் போலாமா சுந்தா" அவர்கள் ஒன்றாக வேலை பார்த்தபோது அழைத்த பெயர்.

கேண்டீனில் அவ்வளவாக கூட்டமில்லை, 

"சொல்லுங்க சார்"

"அட சார் சார்னு சொல்லாத டா"

"சரி சொல்லு சத்யா என்ன பிரச்சினை...?"

"எப்படி சொல்றதுனு தெரில சுந்தா, ரெண்டு வருசத்துல ரிடையர் ஆகப் போறேன், வாழ்க்கைல ஓரளவுக்கு எல்லாமே நல்லா செஞ்சிட்டேன், நாளைக்கே நான் செத்தாகூட எம்பொண்டாட்டிக்கோ, பசங்களுக்கோ எந்த பிரச்சினையும் வராத அளவுக்கு சேப்டி பண்ணிட்டேன், ஆனாலும் ஏதோ ஒன்னு குறையுதே சுந்தா, நீ எப்படி இவ்ளோ சந்தோஷமா இருக்க".

 மெல்லிய சிரிப்பை உதிர்த்த சுந்தரம், "நீ லேட்டு சத்யா" என்றார்.

புரியாமல் பார்த்தார் சத்தியா.

"ஒரு பதினஞ்சு வருசத்துக்கு  முன்னாடி நானும் இதே கேள்வியோட தூக்கமில்லாம சுத்தினேன், விடை தேடி அலைஞ்சேன், அப்போ என்னோட கல்யாண நாள் வந்தது, அன்னிக்கு எதார்த்தமா நானும் அவளும் கோவிலுக்கு போனோம், சாமி கும்பிட்டு உக்காந்திருக்கப்போ அவ கேட்டா, "ஏன் இப்படி உம்முனு இருக்கிங்க"னு, ஒன்னுமில்லைனு சமாளிச்சேன், அவ விடுறதா இல்ல, ஒரு ஸ்டேஜ்ல இப்ப நீ எங்கிட்ட சொன்ன மாதிரி நான் குறைனு நினைச்சதெல்லாம் மனசுல தேக்கி வச்சத எல்லாம் அவகிட்ட சொன்னேன். எல்லாத்தையும் கேட்டவ சொன்னா "உங்கள மாதிரி நிறையபேர் நிம்மதினு ஒன்ன வெளில தேடி அலையறாங்க, உண்மைல அது எங்கயோ வெளில இல்ல, நமக்கு இது போதும், இது கிடைக்காம எத்தன பேர் இருக்காங்கனு நினைச்சு திருப்திபட்டுக்கனும், அந்த மன திருப்திதாங்க நிம்மதி"னு சொல்லி முடிச்சா. அவ பேசி முடிச்சோன என மனசு மாறிடுச்சுனு சொல்லல, ஆனா இத்தனை வருஷமா அவகிட்ட சொல்லாம போயிட்டமேனுதான் வருத்தப்பட்டேன், உள்ள இருந்த தெய்வத்துகிட்ட சொல்லிருந்தா அது எனக்கு பதில் சொல்லி தெளிவு படுத்தியிருக்குமா தெரில, ஆனா என் மனைவி அத செஞ்சா, அதுல இருந்து என்னோட எல்லா கவலையும் அவகிட்ட இறக்கி வச்சுட்டு நான் நிம்மதியா இருக்கேன்" என பேசிமுடித்தார்.

அமைதியாக இருந்த சத்தியாவை பார்த்து "நீயும் அவங்கள கூட்டி கோவிலுக்கு போ இன்னிக்கு" என்றார்.

"தேவையில்ல சுந்தா, நான் இப்ப வருத்தப்படுறேன், இத்தனை நாளா என்னோட கவலைய உன்கிட்ட சொல்லாம விட்டுட்டனேன்னு, நாம நல்லா இருக்கணும்னு யாரெல்லாம் யோசிக்கறாங்களோ அவங்க எல்லாம் நமக்கு மேலானவங்கதான், என்ன அது யாருனு கண்டுபிடிக்கிறதுதான் கஷ்டம்" எனச் சொல்லி முடிக்கவும், தொழிற்சாலை வேலை முடிந்ததற்கான பெல் அடிக்கவும் சரியாக இருந்தது.
                                                                                                                                Mr.பாமரன்

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் 
மனக்கவலை மாற்றல் அரிது.

கடவுள் வாழ்த்து
குறள் எண் -7

ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக