புதன், 31 அக்டோபர், 2018

6. தப்பில்ல...?

தப்பில்ல….?!
எந்த விருத வாங்கக்கூடாதுனு நினைச்சனோ அந்த விருத வாங்கிருக்கேன். ஆனா, இந்த விருதுக்கு முழுக்க முழுக்க நான் தான் தகுதியானவனா இருப்பேன்னு நினைக்கிறேன்.

பெருமையா வெளிக்காட்ட முடியாத ஒன்ன கையில சுமந்துருக்கேன். பரவால்ல மனசுக்குள்ளயே வச்சுக்குறேன், வாழ்க்கைய கடந்து போகறப்ப பயன்படும். நாளைக்கு ஆர அமர உட்காந்து பேச முடியாது. அதனால இந்த மேடை வரைக்கும் வந்ததுக்கான தொடக்கத்த இப்பவே சொல்லிட்றேன்.

ஒரு நாப்பத்தஞ்சு வருசத்துக்கு முன்னாடி அதோ அந்த புதுசா பெயிண்ட் அடிச்சுருக்கிற கேட்டுக்கு வெளிலதான் எங்க ஐயா வருவாருன்னு நானும் என் தம்பியும் எங்க அம்மா கைய பிடிச்சுட்டு நின்னுட்டு இருந்தோம். எனக்கும் என் தம்பிக்கும் பத்து வயசு. எங்க ஐயாரு அப்டியே மீசைய முறுக்கிக்கிட்டு வெளிய வராரு. அவர வரவேற்க ஒரு கூட்டம் காத்துகெடக்கு. எங்க ஐயா வெளில வராரு. காத்திருந்த கூட்டம் முண்டியடிச்சு மாலைபோட்டு அவர வரவேற்குது. மாலைய கழட்டாமலே தூரத்துல இருந்து எங்க அம்மாவ பாக்குறாரு. கழுத்துல இருந்த மாலைய கழட்டிக்கிட்டே வேகமா நடந்து பக்கத்துல வராரு. பக்கத்துல வந்த உடனே உடனே ஒரு அறை. பளார்னு எங்க அம்மா கண்ணத்துல விழுது. பின்னாடியே அவரோட குரல் வருது.

ஏண்டி பயலுங்கள பள்ளிகூடத்துக்கு அனுப்பாம வேலைக்கு அனுப்புறியா? புள்ள வளக்கிற லட்சணத்தப் பாரு அந்த மவளே இந்த மவளேனு திட்டு திட்டுனு திட்டுறாரு. என் தம்பி பயத்துல எங்க அம்மாவ பிடிச்சுக்கிட்டே மொத மொதல்ல எங்க ஐயாவ பாத்துட்டு இருக்கான். அப்பதான் எங்க இரண்டு பேத்தயும் பாக்குறாரு. பாத்த உடனே “என் சிங்கக்குட்டிங்களா” அப்டினு சந்தோசத்துல புல்லரிச்சு, எங்க ஹைட்டுக்கு கீழ குனிஞ்சு, கையில இருந்த மாலைய எங்க இரண்டு பேருக்கும் போட, அது பூமிய தொட்டு நாங்க தாங்க முடியாத கணத்த எங்கள தாங்குற பூமிக்கு கொடுத்துச்சு. மாலைய பிடிச்சுக்கிட்டே எங்க ஐயாவ பாத்து என் தம்பி கேட்குறான்.

"ஐயா தப்பில்ல?"

முகத்த அடையாளம் வைச்சுக்கிற அளவுக்கு விவரம் தெரிஞ்சப்பறம் மொதமொதல்ல, எங்க ஐயாவ அப்பதான் பாக்குறோம். என் தம்பி அவர்ட கேட்டத முழுசும் காதுலகூட வாங்காம “வாங்கடா என் சிங்கக்குட்டிங்களா"னு இரண்டு பேரையும் தூக்குறாரு. என் தம்பி மறுபடியும் கேட்குறான்.

"ஐயா தப்பில்ல?"

"என்னதுடா தப்பில்ல தப்பில்லனு கேட்குற?” என்றார் சில்வண்டுக்கு பதிலளிக்கும் பருந்தாய்.

"கெட்ட வார்த்தை பேசுறது தப்பில்ல?"

கொஞ்ச நேரம்,  அவன் முகத்த புரியாம பார்த்தவரு,  சிரிச்சுக்கிடே "அது அம்மாவ செல்லமா கொஞ்சுனண்டா செல்லம், தப்பில்ல சரியா"னு தோள்ல இருந்த இரண்டுபேருக்கும் முத்தம் கொடுத்து தோள்ல இருந்து எறக்காம வீடு வரைக்கும் போனாரு.

"தப்பில்ல சரியா… அந்த மவளே இந்த மவளே” னு அவர் நாக்கு சொற்கள தப்பவிட அத என் காது சரியாப் பிடிச்சுடுச்சு. கேட்ட காது  சும்மா இருக்காம அத மனசுக்கு கடத்த மனசு தீப்பொறியா என் நாக்குக்கு கடத்த அடுத்த நாளே ஒரு புதுமொழி பிறந்துடுச்சு இந்த மெய்மொழிக்கு. அறிஞ்சவன் செஞ்ச தப்பு அறியா வயது தெரியா தவறுனு பழமொழியா என் மேல விடிஞ்சுது. விளையாட்டுக்கு ஒருவாட்டி சொல்லிப்பார்க்கலாம்னு ஒருமுறை பேசப்பாக்க  தொடங்கி அப்புறம் சகஜமாபஜனை பாடியது.

பத்து வயசுல தீன்னு  தெரியாம நாக்கு கொடுத்த சுகத்துக்கு பழகி பன்னெண்டு வயசுல அதக் கண் கேட்டுச்சு. பேசுனதயெல்லாம் பார்க்கத் தூண்டுச்சு. என்னனு தெரியாம பேசியத இப்போ தெரிஞ்சுக்கத் தூண்டுச்சு.

இரண்டாவது தப்பு. உரியவரின் பார்வைக்கும் அடுத்தவரின் பார்வைக்கும் தெரியாம எதையெல்லாம் பார்க்கக்கூடாதோ அதையெல்லாம் பார்க்க சொன்னுச்சு கண்ணு. அங்கயும் வந்து நின்னான் பொய்யாமொழி.

"டேய் மெய்மொழி"

"என்னடா?"

"தப்பில்லயா?"

"எது தப்பில்லயா?"

"நீ ஒளிஞ்சு ஒளிஞ்சு பாக்குறியே அதெல்லாம்” என்றான்.

"தப்புதான், ஆனா கண்ணு தானா பாக்க சொல்லுதே. நீயும் அங்க வா பாக்கலாம்” என்றேன். எனக்கெல்லாம் வேணாம்ப்பா என்று ஓடியேவிட்டான்.

"டேய்.. அம்மாட்ட சொல்லிடாதடா பொய்யாமொழி” என்று கத்த அது அவன் காதில் விழுந்ததானுகூட தெரியல.

அன்னைக்கே என்னை தடுத்திருக்கலாம் அவன். அன்று ஓடுனவன் மறுபடியும் வந்தான். வேறு மாதிரியான மனுசனா எனக்கு நேர் எதிர்குணாதசியத்தோட வந்தான். எங்கள இரட்டையர்னு சொன்னா எங்க அம்மாவே நம்பமாட்டாங்க. அப்படி ஒரு நேரெதிர் மாற்றம். ஆனா அவன் வந்த நேரம் மிகவும் தாமதம்.
என் கண் பார்த்தத, என் வாய் பேசியத என் காது மறுபடியும் மறுபடியும் அடிக்கடி கேட்டதயெல்லாம் என்னோட மெய்க்கும், மூச்சுக்கும் பரப்பிவிட்டு அது இரண்டும் என்னை நச்சு எடுத்துட்டிருந்த பதினெட்டாது வயசுல வந்து சேர்ந்தான்.
ஐம்பொறிக்கும் ஒரே நேரத்துல சுகமேத்த நான் பயந்து பயந்து பட்டணத்துக்கு போனத தெரிஞ்சு வந்தானோ? இல்ல தெரியாம வந்தானோ? தெரில. ஆனா நான் எப்போதும் மொத மொதல்ல முதலா தப்பு செய்யத் தொடங்கும்போதெல்லாம் இந்த பொய்யாமொழி வந்துடுவான் கேள்வி கேட்க. பட்டணத்து நான் ஒரு வீட்டுக்குள்ள நுழைய போக, என் கையை பின்னாள இருந்து பிடிச்சு இழுத்து “டேய்” அப்டினு நிப்பாட்டுனான். "
டேய் பொய்யு நீ எங்கடா இங்க?" ன்னேன் கொஞ்சம் பதட்டமாகி ஆனா இயல்பா இருக்கவன்மாதிரி நடிச்சுக்கிட்டே.

"எங்க பேராசிரியர பாக்க வந்தேன்டா, நீ எங்கடா மெய்யு இங்க?"

"தெரிஞ்சவங்கள ஒருத்தவங்கள பாக்க வந்தேன்டா, இங்க இருக்கிறதா சொன்னாங்க, அதான் அப்டியே...”ன்னு மழுப்புனேன், ஆனா கண்டுபிடிச்சுட்டான் நான் எதுக்காக வந்துருக்கேன்னு  

"மெய்யு, இது தப்புடா? வா போலாம்" ன்னு என் கையை பிடித்து இழுத்து தடுக்க

"தப்புதான்டா பொய்யு, ஆனா அடக்க முடியாம இருக்குதே, உன்ன மாதிரி நல்லவனா இருக்க முடியாதுடா என்னால. இந்த மெய் இப்டியே இருந்துக்கிறேன் விடுடா” ன்னேன். உடனே என்ன நினைச்சான்னு தெரியல என் கையப் பிடிச்சுக்கிட்டே

தவறதை தவறெனத் தெரிந்தால்
மனமதை மறுபடி பலபடி சொல்லும்
புலனதை புலன்தந்து கேட்டால்
பலனதை வாழ்நாள் சொல்லும்”. – அப்டின்னு அவனோட ஆராய்ச்சித்தமிழ எதுமே புரியாத, அதுவும் அறிவை பெற்று தர கண், காது, வாய், மூக்கு, தோல்னு எல்லாத்தோட கட்டுப்பாட்டையும் இழந்து இருக்குற  என்கிட்ட சொல்லிட்டு இருந்தான். அவனுக்கு நின்னு பதில் சொல்லகூட மனசில்ல, பொறுமையுமில்ல. அப்போ அவன் கைய உதறிட்டு ஓடுனவன்தான்.
இப்போ ஒன்பது கொலைக்குச் சொந்தக்காரனாக எட்டு பெண்கள்   வன்கொடுமைக்குச் சொந்தக்காரனாக மாபெரும் குடிகாரன்னு பல கெட்ட பெயர் வாங்கியவனா மொத்தத்தில் மெய்மொழிங்கிற பேர வெளியில சொல்லமுடியாத அளவுக்கு வளந்து நிக்கிறேன்.
இதோட தொடக்கம் எங்க தொடங்குச்சுனு தெரில, இதோ இந்த கேட்டுக்கு வெளியில அடக்கமுடியாத நாக்கால  தகாத வார்த்தையை சொன்னாரே எங்க ஐயா அங்கு தொடங்கிருக்கலாம், இல்ல என் தம்பி பேசாம இருந்தும் அத நான் பேசத் தொடங்கினேனே அப்போ தொடங்கியிருக்கலாம், எங்க தொடங்கியதுனு  தெரியல   னா ஐம்புலன்களில் இருந்துதா தொடங்குனுச்சுனு மட்டும் நல்லா புரியுது. இன்னையோட என் தம்பி இறந்து பத்து வருசம் ஆச்சு. என் பதினஞ்ச வருச ஜெயில் வாழ்க்கை இன்னையோட முடியுது. வெளில நான் சின்னவயசுல எங்கய்யா வருவாருனு காத்திருந்தமாதிரி அதே கேட்டுக்கு வெளிய என் பேரன் காத்துட்டு இருக்கான். சுதந்திர தினத்தில விடுதலை. இவர மாதிரி நல்லவனா வாழுனு செத்தும் நெடுநாளைக்கு வாழ்ந்துட்டு இருக்க என் தம்பியோட பேருல வருசா வருசா கொடுக்குற பொய்யாமொழியின் ”குறளாய் வாழ்வாய்” விருது இந்த வருசம் எனக்கு. இந்த மெய்மொழிக்கு.

 ம்ம் தப்பில்ல...!

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்

கலைஞர் உரை:
மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக