திங்கள், 27 ஜூன், 2022

தீண்டாமை - அருள். ஜெ

 தீண்டாமை

- அருள். ஜெ

எச்சரிக்கை:

தீண்டாமை ஒரு பாவச்செயல்.


தீண்டாமை ஒரு பெருங்குற்றம்.


தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்.  




ட்டத்தில் இருந்து பாக்கையில் உசுருள்ள பொம்மை போலத் தெரிந்தான்  வேடியப்பன். வேசக்கால கதிர்களால் விளைந்த கண் கூச்சத்தில் சோத்துக் கையை வாகாக நெற்றியில் வைத்துக் கொண்டு பனையின் ஒசரத்தில் தெரிந்த கணவனை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தாள் குருவு.


உச்சி வெயிலோடு பனை மட்டையை கையிலிருந்த குறுங்கத்தியால் வலித்துக் கொண்டிருந்ததால் உண்டான உடல் வெம்மையும் சேர வேக்காட்டில் குளித்துக் கொண்டே வேகுவேகுன்னு பனை மட்டையை அறுத்து தள்ளிக் கொண்டிருந்தான். அறுத்து தள்ளிய பனை மட்டைகளும், பனங்காய்களும் ஒவ்வொன்றாக “சொத்..சொத்” என்று கீழே விழுந்து கொண்டிருந்தன. இறுதியாக கள்ளுக் கலயத்தை வாகாக வைத்து விட்டுக் கீழே இறங்கினான்.


இறங்கிய கணவனின் வியர்வையைத் துடைக்க, கையிலிருந்த துண்டைக் கொடுத்தாள் குருவு. “உஸ்ஸ்..” என்று பெருமூச்சு விட்டுக் கொண்டே தன் மேல் உள்ள வியர்வையைத் துடைத்தான். பனை ஏறி, ஏறி அவன் நெஞ்சு காய்ப்பேறித் தழும்பாகக் கிடந்தது. அதை ஆதரவுடன் தடவிக் கொடுத்தாள்.


“என்ன புள்ள அப்படிப் பாக்கே, பனையேறி பொழைக்கிற அத்தனை ஆளுக மாரும் இப்படிதான் காய்ச்சிப் போய்க் கிடக்கும். ஏ அப்பாரு மாரப் பாத்திருக்கணும் நீயி, இதெல்லாம் ஒன்னும் இல்லன்னு நினைப்ப.” என்றபடியே மேற்கொண்டு பனையேறுவதற்கு கச்சைய இறுக்கிக் கட்டிக் கொண்டு எழுந்தான்.           


“யே இவனே, வெயில் உச்சியைத் தாண்டிப் போச்சே பசிக்கலே உனக்கு, வாயேன் இப்படி உக்காரு.” என்றபடியே சோத்துச் சட்டியை எடுத்தாள். வேடியப்பன் மறுபடி உக்கார்ந்தான். தூக்குச் சட்டியின் மூடியை கவுத்து அவனிடம் நீட்டிய குருவு, வாளியில் இருந்த கேப்பங்களியில் நீர் விட்டு நன்கு கரைத்து அஞ்சு சின்ன வெங்காயத்தை உரித்து தொட்டுக்க அவனுக்குக் கொடுத்தாள். களைப்பால் உண்டான பசியில் ஆசையாய் கலயத்தை வாங்கிய வேடியப்பன் மடமடவெனக் குடித்து சின்ன வெங்காயத்தை எடுத்துக் கடித்தான். 


குடித்து முடித்ததும், “சரி புள்ள நீ வீட்டுக்குப் போய் பொழுதடைஞ்சதும் ஆக வேண்டியதப் பாரு. நா அப்படியே பனைங்கட்டிய வித்துபுட்டு வீடு வந்து சேருதேன்” என்றபடியே நடந்தான். வேடியப்பன் பனை உச்சிக்கு ஏறும்வரை பார்த்துக் கொண்டிருந்த குருவு, பின் கூடையைத் தூக்கிக் கொண்டு நடந்தாள்.


அவர்களில் வீடு ஊரின் கடைசியில் இருந்தது, போகும் வழியில் தான் அரண்மனைக்காரத் தெரு இருக்கிறது ஊரில் உள்ள அத்தனை மேல்குடி மக்களும் இங்குதான் இருந்தார்கள் அவரவர் வசதிக்கு ஏற்ப ஓட்டு வீடோ காரை வைத்த மச்சு வீடோ கட்டிக் கொண்டிருப்பார்கள். ஊரின் கடைக்கோடியில் இருப்பவர்கள் ஓட்டு வீடு கட்டிக் கொள்ளக் கூடாது. பனைக் கூரை தான் வேய்ந்து கொள்ள வேணும். ஊர்த் தெருவுக்குள் செருப்பு அணியக் கூடாது. மீறி அணிந்தால் ஊர் பஞ்சாயத்தக் கூட்டி ஊரை விட்டுத் தள்ளி வைத்து விடுவார்கள். பிறகு குடிக்க, தண்ணீர் கூட கிடைக்காது. ஏனென்றால் நல்ல தண்ணீரானது இங்கு மட்டும் தான் கிணற்றில் இருக்கிறது. தாங்களாக தங்கள் தண்ணீர்க் கலயங்களைக் கிணற்றில் இறைத்து ஊற்றிக் கொள்ளக் கூடாது. ஊர்ப் பெண்கள் யாராவது தண்ணீர் இறைக்க வந்தால் அவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி தங்கள் பானைய நிரப்பிக் கொள்ள வேணும். அப்படி மோந்து ஊற்றும் போது தெரியாத்தனமாக கையோ, உடுத்துத் துணியோ மேலே பட்டு விட்டால் போச்சு. அன்னைக்குத் தண்ணீர் கிடைக்காது. பானையில் இருந்த தண்ணீரைப் பிடுங்கி கீழே கொட்டி விட்டு பானையை உடைத்து விடுவார்கள்.              


அரண்மனைக்காரத் தெருவில் யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் தலையைக் குனிந்து கொண்டே நடந்து கொண்டிருந்தாள் குருவு. நடக்கும் போதே அவளுக்குக் கிறுகிறுவென்று வந்தது. உச்சி வெயில் வேறு. அது மட்டும் தான் காரணமா? ஒருவேளை அதுவா இருக்குமோ? அவளுக்கு நாள் தள்ளிப் போயிருந்தது. அவளுக்கு ஏற்கனவே அதைப் பற்றிய எண்ணம் இருந்தது. நாள் தள்ளிப் போயிருந்த நிகழ்வை உறுதியானதும் சொல்லிக் கொள்ளலாம் என்றிருந்து விட்டாள். இப்போது தலையைச் சுற்றிக் கொண்டு கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. லேசாகத் தள்ளாடினாள். கீழே விழுந்து விடாமல் இருக்க பிடித்துக் கொள்ள ஏதேனும் பிடி கிடைக்குமா என்று ஏறெடுத்துப் சுற்றிலும் பார்த்தாள். சற்றே பக்கத்தில் கோவில் தெரிய அதனருகே சென்றாள். கோவில்ப் படிக்கெட்டில் உட்கார்ந்து கொண்டாள்.


ஊரில் இருந்த சிலர் அவள் அங்கே உட்கார்ந்திருப்பதைக் கண்டனர். அவளை யாரென்று அவள் உடுப்பை வைத்தே அடையாளம் தெரிந்து கொண்டவர்கள், விறுவிறுவென அவள் அருகே வந்தனர்.


“ஏய், உனக்கு எம்புட்டு கொழுப்பிருந்தா கோவில் படிக்கெட்டுல்ல வந்து உக்காருவ எழுந்துருச்சு ஓடு நாயி”


“அய்யா, சாமி நடக்கயில கிறுகிறுன்னு வருதுங்க. நடக்க முடில. கொஞ்ச நேரம் இப்படி ஓரமா உக்காந்துட்டு விரசா போய்டுறேன்.” 


“தலைய சுத்திட்டு வந்தா தெருவுல விழுந்து சாவு. இங்க ஏன்டி வர்ற உங்க ஆளுங்க கோவில் மண்ண கூட மிதிச்சாலே தீட்டுன்னு இருக்கிலே, இங்க வந்து உக்கார எவ்வளவு துணிச்சல் உனக்கு.?” குருவு எழுந்து விட முயற்சித்தாள். அவளுக்கு மேலும் மேலும் இருட்டிக் கொண்டுதான் வந்தது.


“கீழத்தெரு நாயே, சொல்லச் சொல்ல கேக்காம மறுபடியும் உக்காரவா செய்யுற.?” என்றவன் அவள் பின்னந்தலையில் பளீரென அடித்து விட்டு, தலை மயிரைப் கொத்தாகப் பிடித்து தரதரவெனத் தெருவுக்கு இழுத்தான். ஏற்கனவே இருந்த கிறக்கமும் தெருப் புழுதியில் தலைமயிரை இழுத்துக் கொண்டு போனதால் உண்டான வலியும் சேர, சாமி… அய்யா... விட்டுடுங்க போய்டுறேன், என்னை விட்டுடுங்க சாமி… சாமி...” என்று கதறினாள். அவள் கதறலைக் காதில் ஏற்றிக் கொள்ளாதவன் மேலும் மேலும் இழுத்துக் கொண்டே சென்றவன் நடுத்தெருவில் அவளைக் கொண்டு வந்து விட்டான்.


“இன்னொரு தடவை உன்னக் கோவில் பக்கம் பாத்தேன் தொலை உரிச்சு உப்புக் கண்டம் போட்டுடுவேன் பாத்துக்கோ எந்துச்சு போடி நாயே. எந்தி” என்றபடியே அவள் வயிற்றில் ஓங்கி மிதித்தான். “அம்மா” என்றபடியே வயிற்றைப் பிடித்தபடி சுருண்டாள் குருவு. மயக்கத்தோடு வலியும் சேர்ந்து கொள்ள கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன.


பனங்கட்டியைத் தெருத் தெருவாக விற்றுக் கொண்டிருந்த வேடியப்பனுக்கு இருட்டியபோது தான் தகவல் கிடைத்தது. விற்காமல் இருந்த பனங்கட்டியை அங்கயே போட்டு விட்டு பதைபதைப்புடன் வீடு நோக்கி விரைந்தான். அவன் வீட்டின் முன்னே அப்பகுதி மக்கள் கூடி இருந்தனர்.


“யப்பா, குருவு புருசன் வர்றான். கொஞ்சம் வழிய விடுங்கப்பா.” எனக் கூட்டத்தில் யாரோ கூற எல்லோரும் வழியை விட்டனர்.


“என்னாச்சு...? குருவுக்கு...?" என்றபடியே வீட்டுக்குள் நுழைய முயன்றவனை உள்ளே இருந்து வந்த மருத்துவக் கிழவி வழியை மறைத்தாள்.


“யப்பா.. சித்த நேரம் வாசல்ல உக்காரு.”


“குருவுக்கு என்னாத்தா ஆச்சி.?”


“ஒன்னும் ஆவலப்பா. நல்லா இருக்கா. நீ செத்த உக்காரு. கொஞ்சம் உடம்பு முடியாம இருக்கு வைத்தியம் நடக்கு. ஏண்டி பயலுக்கு ஒரு சொம்பு தண்ணியைக் கொடுங்கடி.” என்றவாறே உள்ளே சென்றாள். தண்ணீரை வாங்கி குடித்த வேடியப்பன், வீட்டு வாசலில் இருந்த மரத்தில் குத்துக் காலிட்டு அமர்ந்தான். வாசலில் நின்று கொண்டிருந்த ஒருத்தியை சாடைக்காட்டி அருகே வரும்படி அழைத்தவன், “சொடலையம்மா, குருவுக்கு என்ன நடந்துச்சு.?" எனக் கேட்டான். 


நடந்ததைச் சொன்னாள் சொடலையம்மா, “அடிச்சது மட்டுமில்லாம பாவிபயளுங்க கருவையும் சிதைச்சுபுட்டானுங்களே” என்றாள் தன் சேலைத்தலைப்பை வாயில் வைத்து அழுத்தியபடி.


“என்னாத்தா சொல்ற?”



“ஏந்தம்பி, உனக்கு தெரியாதா.? குருவு சொல்லைலையா உங்கிட்ட.? குருவு முழுவாம இருக்காப்பா. இது அவளுக்கு மூணாவது மாசம். மேலத்தெருக்காரங்க வயத்துலையே மிதிச்சுபுட்டானுங்க. உசுரு ரத்தமா வெளிய வந்துருச்சுப்பா. அதுக்கு தான் ஒத்தடம் கொடுத்து வைத்தியம் நடக்குது.”


“யம்மா… யாத்தே...” என்றபடி கதறத் துவங்கியவனை சிலர் வந்து தேற்றத் தொடங்கினர்.


மறுநாள் கீழைத்தெரு சனங்கள் அம்புட்டும் கூடி இருக்க, காரசாரமாக விவாதங்கள் நடந்து கொண்டிருந்தன.


“ஏம்ப்பா, வர வர மேலைத்தெருக்காரங்க கொடுமைங்க அதிகமாய்ட்டே போகுது. உண்டாகிருக்குற புள்ளைக்குத் திடீர்ன்னு மயக்கம் வர ஒரு பிடிமானத்துக்கு கோவில் வாசல்ல போய் சாயப்போய் அந்த புள்ளைய அடிச்சிருக்கானுங்க. அவங்க அடிச்சதுள்ள உண்டாகிருக்குற புள்ளைக்குக் கழிஞ்சு போயிருக்கு, இந்த அக்கிரமத்துக்கு தீர்வுதான் என்ன?"


“இந்தப் புள்ள எதுக்குப்பா அங்க போச்சி? அறிவு வேணாமா? இந்தப் புள்ள போவலைன்னா அவன் அடிப்பானா?”


“கோவிலு என்ன அவன் அப்பன்காரன் சொத்தா?”


“அதையே அவனும் கேப்பான்.”


“அது அவன் கோவிலுன்னு பட்டயம் ஏதும் எழுதி வச்சிருக்கா?”


“அது அவன் கோவிலுன்னு நெனைச்சு தான் பரம்பரையா கும்பிட்டு இருக்கான். இப்ப நீ போனீன்னா விடுவானா?”


“ஏன் விடமாட்டான்?”


“அவிங்க நம்மளை மாறி ஈனப்பொழைப்பு பொழைக்கலையே. நீ அவிங்க கூட போட்டிப் போட்டா சண்டைதான் வரும் பாத்துக்க.”


“வரட்டும், அவங்களா நாமளான்னு பாத்துக்கிறலாம். என்னய்யா சொல்றீங்க?”, என ஒருவன் கூற சிலர் எழுந்தார்கள்.


“அட உக்காருங்கப்பா. உடனே எந்துச்சுடுரீங்க. நாம நாலு பேரு போய் நூறு பேர் கூட சண்ட போட முடியுமா? நமக்கு கேக்க நாதியில்லையே. இந்த பிரச்சனைய அப்படியே விட்டுருங்க. இல்லன்னா மேலப் பொல்லாப்பு தான் வந்துசேரும் பாத்துக்கிருங்க.”


“நீங்க அவிங்களுக்கு அடிக்க வாகா குனிஞ்சு முதுக காட்டியே பழகிட்டீறு. அதான் இப்படி பேசுதீய. நாங்களும் அப்படியே இருக்கணுமாக்கும்.?” கூட்டத்தில் ஒரு இளவட்டம் கத்தினான்.


“யே… செத்தப்பய ஆரு அது, நாலும் தெரிஞ்ச பெரியவுக பேசிட்டு இருக்கோம்ல. எங்க தலைமுற அப்படித்தால இருந்தது. நாங்கல்லாம் கோவிலுக்குள்ள நுழைஞ்சிருப்போமா? கோவிலுக்குல்லையே போகாம எவ்வளவு சனம் கிடக்குது. உள்ள போய்க் கும்பிட்டாத்தான் சாமியா? வீணா உசுரைக் கொடுக்காதீங்கப்பா.”


“தொட்டா தீட்டு, பட்டா தீட்டுன்னு இருக்குற ஊருக்குள்ள அப்படி ஒரு உசிரு தான் வேணுமா? அதுக்குச் செத்தொலியலாம்”, கூட்டத்தில் காச்சு மூச்சு என்று கூக்குரல்கள் எழுந்தன. இளவட்டங்கள் பலர் எழுந்து போனார்கள்.


இளவட்டங்கள் அன்று இரவே போய் மேலத்தெரு வீடுகளில் கல்லெறிந்து விட்டு வந்தார்கள்.


“கீழத் தெரு நாய்களுக்குக் கொழுப்பப் பாத்தியா. எவ்வளவு துணிச்ச இருந்தா நம்ம வீட்டு மேலக் கல்லெறிவான். சும்மா விடக்கூடாது அவங்கள” என இவர்கள் சென்று அவர்கள் வீட்டுக்குத் தீ வைத்து விட்டு வந்தார்கள். கீழைத் தெரு வீடுகள் எல்லாம் குடிசைகள் என்பதால் சீக்கிரம் பற்றிக் கொண்டன. பல எரிந்து சாம்பலாகிப் போகின. ஊருக்குள் கலவரம் மூளும் சூழ்நிலைகள் உருவாகின.


தீயில் எரிந்து மீத மிஞ்சிய பொருட்கள் ஒரு ஓரத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்தது.


“நாங்க அப்பவே சொன்னோம்ல அவிங்களுக்கு மனுச அதிகம்ன்னு ஏம்பேச்சக் கேக்காம அவிக வீட்டுலப் போய் கல்லெறிஞ்சு வந்துருக்கீகலே. இப்ப பாரு?”


“புல்லு தின்கிற மாட்ட விடக் கேவலமா போயிருச்சு நம்ம நிலைம, அவுகளுக்கு பயந்து கொஞ்சங்கொஞ்சமா சாவுறத விட ஒரேடிய சாவலாம்”


“கூறுகெட்ட பயலே, இப்போ நாம எல்லாத்தையும் இழந்துட்டு நிக்கிறோம். அது மட்டும் தான் பாக்கி”, ஒரு பெருசு சீறியது. ஒரு ஓரத்தில் குந்தி உக்கார்ந்திருந்த வேடியப்பன் எழுந்தான்.


“எல்லாரும் கேட்டுக்கங்க. இனியும் பொறுத்துட்டுப் போக முடியாது. இத இப்படியே விட்டா கடசில வெட்டுகுத்துன்னுதா போய் முடியும். அதனால நம்ம சனங்க கோவப்படாம யோசிங்க. நாம நுழைய முடியாத கோவிலுக்கு அவன் வருசா வருசம் வந்து வரி வாங்கிட்டுப் போவறான். நாம ஏந்தரனும்? இனி ஆரும் வரி தரக்கூடாது. நாம செருப்பு போடக்கூடாதுன்னு சொல்றான் இனி போடணும். மேல்துண்டு போடக்கூடாதுன்னு சொல்றான் இனி போடணும். நாம யாரும் அவுக வீட்டுக்கு ஏவல் வேலை செய்யப் போகக் கூடாது. நாம இல்லீன்னா அவுங்க தான் நாறிப் போவாக. நம்ம பொழப்பு நம்மோடயே போவட்டும். நம்ம கொளந்தைகள பள்ளியோடத்துக்கு படிக்க அனுப்பணும்"


“அவுக புள்ளைங்க படிக்கிற இடத்துல நம்ம புள்ளைக படிக்க அவுக வுடுவாகளா?”


“விடமாட்டாங்க. பாதிரி சாமியாருங்க நம்மளை மாறி பாவப்பட்ட சனங்க படிக்கிறத்துக்குன்னே காசு ஏதும் வாங்காம பள்ளியோடம் நடத்துறாங்க அங்க சேத்து வுடுவோம்”


“சரிப்பா இந்தக் கோவில் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?”


“அவங்க கோயிலுக்கு உள்ள கும்புடுற சாமியத் தான் நாம வெளியே நின்னு வேண்டிக்கிடுதோம். அது அவுக அப்பன்மாரோ, பாட்டன்மாரோ கட்டி வச்ச கோவிலு இல்ல. பொதுச் சொத்து. கோவிலு அவுகளுக்கு மட்டும் இல்ல, நம்மளுக்கும் பொது”


“அவுக பரம்பரையா கும்பிட்டு வர்ற கோவிலுக்குள்ள நம்மள எப்படி விடுவான்?”


“நாம சர்க்காருக்குப் போய் கேப்போம்.”


“என்னப்பா புத்திகெட்டுப் பேசுற.? திருடனுங்ககிட்ட இருந்து பொருள காப்பாத்த, திருடனுங்ககிட்டவே கொடுத்த கதையா. மேல எல்லாமே அவுக ஆளுங்க தான இருக்கானுங்க. நம்மளுக்கு எப்படி நியாயம் கிடைக்கும்?”


“வெள்ளைக்காரனுக்குக் கீழ தான அவுகளும் வேலை செய்யுறானுங்க. நாம நேரா வெள்ளைக்கார துரைக்கிட்டவே நியாயம் கேப்போம். எத்தனை வருசமானாலும் சரி. யாருப்பே எங்கூட வர்றீங்க.?” வேடியப்பன் கேட்டதும் பலர் எழுந்தார்கள்.


“ஒரு பத்து பேரு வாங்க. மீதி பேரு நம்ம சனங்களைப் பாத்துக்கோங்க. அன்றே எல்லோரும் காவல்நிலையத்திற்குப் புகார் கொடுக்கச் சென்றனர். ஆனால் அங்கே காவல் அதிகாரியாக மேலத்தெரு ஆள்தான் இருந்தார்.


“மேலத்தெரு ஆளுகளுக்குச் சேவகம் பண்ணவே பொறந்த நாய்ங்க. உங்களுக்கு கோவிலுக்குள்ள போறதுக்கு உரிம வேணுமா? ஒழுங்கா மேலத் தெரு ஆளுங்க சொல்ற பேச்சைக் கேட்டு நடக்கப் பாரு”, மனு ரெண்டாகக் கிழிக்கப்பட்டு, அவர்கள் முகத்தில் வீசப்பட்டது.


“யாரும் மனச விட்டுற வேணாம். இத நான் முன்னாடியே எதிர்பார்த்தேன். நாம நேரா வெள்ளைக்காரத் துரையைப் பாத்து மனு கொடுக்கலாம்” என்றான் வேடியப்பன். அவர்கள் பட்டணத்தில் பல மாதங்கள் தங்கி ஒருவழியாக வெள்ளைக்காரத் துரையைப் பாத்து மனுவைக் கொடுத்தார்கள். வெள்ளைக்காரத் துரை முற்போக்கு எண்ணம் கொண்டவராய் இருந்தார். சில நாட்களிலே உத்தரவு வந்து விட்டது.


“கோவில் என்பது எல்லோருக்கும் பொதுவான ஓன்று. அங்கு யாரும் யாரையும் நுழையக்கூடாது என்று சொல்லக் கூடாது. மேலும் பிறப்பால் உயர்வு தாழ்வு கிடையாது. மேல் கீழ் என்று எதுவும் கிடையாது. எனவே இந்த உத்தரவை தாங்கி வரும் சனங்களுக்கு கோவிலில் நுழைய முழு உரிமை உண்டு. கோவில் நுழைவு செய்யும் இந்த சனங்களுக்கு காவல்துறை முழுப் பாதுகாப்பை வழங்க வேண்டும். மேலும், இவர்கள் கோவிலில் நுழையக்கூடாது என்று தடுப்பவர்களைச் சட்டம் கடுமையாகத் தண்டிக்கும் என இதன் மூலம் உத்தரவிடப்படுகிறது”


மேளதாளம் முழங்கிக் கொண்டிருக்க, அத்தனை கீழைத் தெரு சனங்களும் அந்த வெள்ளைக்காரத் துரையோடு கோவில் வாசலில் கூடிருந்தனர். துரையே நேரடியாக வந்ததால் மேலதெருக்காரர்களால் வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடிந்தது. வேடியப்பன், குருவுவைக் கூப்பிட்டான்.


“ஏம்புள்ள குருவு வா. நீதான் இந்த கோவிலுக்குள்ள மொத காலடி எடுத்து வைக்கணும். வா புள்ள.” குருவு தயங்கித் தயங்கி கோவில் படிக்கட்டில் தனது வலது காலை எடுத்து வைத்தாள். கூட்டம் ஆரவாரம் செய்தது. வெட்கத்துடன் குருவு அண்ணாந்து மேலே பார்த்தாள். கோபுரச் சிலைகள் சிரித்தன.


-முற்றும்-


குறள்: 309


உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்

உள்ளான் வெகுளி எனின்.


பொருள்:


ஒருவன் தன் மனத்தால் சினத்தை எண்ணாதிருப்பானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்.


குறிப்பு:


கதைக் கரு உதவி: பூமணி - அஞ்ஞாடி.


பிற நூல்கள்:


ராபார்ட் ஹர்டுகிரேவ்- THE NADARS OF TAMILNAD                                                               


                       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக