பின்னிரவின் இருளில், சற்றுத் தொலைவில் மங்கலாகத் தெரிந்த குன்றினை நோக்கி, ஐங்கரனும், அஞ்சுதனும் வேகமாக நடந்துகொண்டிருக்க, அவர்களது முகத்தில் வழியும் வியர்வையைத் துடைக்க, அந்தமான் கடற்காற்று முயற்சித்துத் தோற்றுக்கொண்டிருந்தது.
இருவரில், அஞ்சுதன் மட்டும் அடிக்கடி திரும்பி அவர்களைச் சுற்றி நிகழ்வதைப் பார்த்துக்கொண்டே நடந்தான். தூரத்தில் தெரிந்த தீப்பந்தங்களின் ஒளி, நேரமாக ஆக அதிகரித்துக்கொண்டே வந்தது.
“நம்மளைப் பாத்துடுவாங்களா?” என்ற அஞ்சுதனின் கேள்விக்கு, அவனைப் பார்க்காமல் நேராக நடந்தபடியே பதில் கூறினான், ஐங்கரன்.
“வாய்ப்பிருக்கு”
“கூண்டுலருந்து தப்பிச்ச கையோட, இந்த தீவுல இருந்தே தப்பிச்சிருக்கலாம். நீ என்னடான்னா என்னை இங்க இழுத்துட்டு வந்துட்டு இருக்க” என்றான் அஞ்சுதன், சலிப்பாய்.
“தப்பிக்குறதா? இரவு நேரத்துல கூண்டைவிட்டுத் தப்பிவந்ததைப் போல அவ்வளவு எளிதில்ல இந்தத் தீவை விட்டு வெளிய போறது. நாம வந்த ப்ளைட் இப்ப அவங்க கட்டுப்பாட்டுல இருக்கு. படகுகளுக்கும் இதே நிலைமைதான்”
உடனே அஞ்சுதன் ஏதோ கூறவர, “தயவுசெஞ்சு கடல்ல குதிச்சு நீந்திப் போயிடலாம்னு மட்டும் சொல்லிடாத. இங்க இருந்து நாம உயிரோட வெளிய போகணும்ன்னா அதுக்கு அந்த தங்கக்காப்பைக் கண்டுபிடிச்சே ஆகணும்” என்று ஐங்கரன் இடைமறித்தான்.
“எல்லாம் அந்தக் காப்பால வந்தது. எவனோ ஒரு குடிகாரன் பேச்சைக் கேட்டு, நீ இந்த தீவுக்கு அதை ஆராய்ச்சி பண்ண வந்ததும் இல்லாம, உனக்கு மொழிபெயர்க்க ஒரு ஆளையும், சுத்திப்பார்த்துட்டு வரலாம்டான்னு சும்மா இருந்த என்னையும் இங்க இழுத்துட்டு வந்துட்ட, இங்க வந்து இறங்கினதும், உங்க அரசரோட கைக்காப்பு பத்தின விவரங்களைக் கேட்க வந்து இருக்கோம்னு சொன்னதும்,மொழிபெயர்க்க வந்தவன் கழுத்துல ஈட்டியை இறக்கிக் கொன்னு, நம்மளையும் கூண்டுல அடைச்சுட்டானுங்க. இத்தனையும் இந்தத் தீவுல இருக்கா இல்லையானு கூடத் தெரியாத ஒரு காப்புக்கு”
“காப்பு இங்க இல்லன்னா, பயந்துபோய் அவரைக் கொன்னு, நம்மளைச் சிறைபிடிச்சுருக்க மாட்டாங்க. ஆக, காப்பு இங்க தான் இருக்கு”
“அதுசரி. ஆனா குறிப்பா இந்தக் குகையிலதான் இருக்குன்னு எப்படி சொல்லுற?” என்ற அஞ்சுதன், குன்றின் அடியில் இருந்த குகையைச் சுட்டிக்காட்டினான்.
“தீவைப் பத்தி சொன்னவன்தான் இந்தக் குகை பத்தின தகவலையும் சொன்னான். ஆனா இங்க வந்தபிறகுதான் இந்தத் தீவு முழுக்கவே குகைகள் தான்னு தெரியுது. ஆனா காப்பைத் தேடித்தான் வந்து இருக்கோம்னு அவர் சொன்னதும், தீவு மக்கள்ல சிலர் பயந்துபோய் ஒரே பக்கம் பார்த்து முணுமுணுத்தாங்க, அவங்க பார்த்த பக்கத்துல இந்தக் குகை மட்டும் தான் இருக்கு”
“வெளிச்சத்துக்கு ஒன்னும் இல்லாம அந்த இருட்டுக் குகைக்குள்ள போயி என்ன பண்ண? அங்கயும் தேடி வந்தா?” என்ற அஞ்சுதனின் குரலில் அச்சம் அதிகரித்தது.
“வரமாட்டாங்க”
“எப்படி சொல்ற?”
“அவங்க நம்பிக்கைப்படி, இந்த குகையில அவங்க அரசர் ஓய்வெடுத்துட்டு இருக்கார். அதனால குகைக்குள்ள போறது, அவருக்கு தொந்தரவு தர்ற மாதிரின்னு உள்ள வர மாட்டாங்க”
“இப்ப நாம உள்ள போகப் போறோமே. இது தெரிஞ்சா?”
ஐங்கரன் அஞ்சுதனை நோக்கி திரும்பி நின்றான்.
“அஞ்சுதா! நாம வெளிய இருந்தாலும் நம்மளைக் கொல்லத்தான் போறாங்க. அதனால குகைக்குள்ள போறதைப் பத்தி கவலைப்படத் தேவையில்லை”
“ஆனா இவங்க ஏன் இப்படில்லாம் நடந்துக்குறாங்க?” என்றான் அஞ்சுதன்.
“இந்தத் தீவு வெளி உலகத்தோட எந்தத் தொடர்பும் இல்லாதது. தங்களுக்குன்னு சில கட்டுப்பாடுகள், கொள்கை முறைகள்ன்னு இயற்கையோட சார்ந்த ஒரு வாழ்க்கை வாழறவங்க. நம்ம மாதிரி வெளில இருந்து இங்க வர்றவங்க இவங்களுடைய முறைகளுக்கு ஒத்துவரமாட்டோம். நம்மால புதுசு புதுசா நோய் பரவும். அது இவங்களுக்குத் தேவையில்லாததும் கூட. அதனால யார் வந்தாலும் கொன்னுடறாங்க. சில நேரம் பாதியிலயே தடுத்து அனுப்பிடுவாங்க.”
“ஆனா இதுவும் நம்ம நாடுதான. நம்ம நாட்டோட கட்டுப்பாட்டுலதான இருக்கு. அதெப்படி கொல்றாங்க பயமில்லாம?” என்று கேட்ட அஞ்சுதனைப் பார்த்து,
“நாடா? அப்டின்னா என்னன்னே இவங்களுக்குத் தெரியாது. நம்ம பேசுற மொழியே புரியாது. இவங்க வாழ்க்கையே வேற. இதுக்கு முன்னாடி இங்க வந்தவங்க மதமாற்றம் பண்ண வந்துருக்காங்க. சாதி மதம்னா என்னன்னே தெரியாம ஒரே கூட்டமா வாழ்ந்துட்ருக்க இவங்ககிட்ட மதத்தைப் பத்திப் பேசுனாக் கொஞ்சுவாங்களா? தனக்கு ஒவ்வாத யார் வந்தாலும் திரும்பிப் போன்னு எதிர்ப்பைக் காட்டுவதெல்லாம் ஒரு உயிரினத்தின் அடிப்படை உணர்வு. தப்பு இவங்க மேல இல்ல. ஒரு நாடா நாம இவங்களுக்கு என்ன பண்ணிருக்கோம்னு யோசிச்சுப்பாரு. இப்படி ஒரு மக்கள் கூட்டம் இருக்கறதைப் பத்தி நாம என்ன அக்கறை காட்டியிருக்கோம். ஆனா அதப்பத்தி அவங்க கவலைப்படப் போறதும் இல்ல. அவங்களோட தேவைப் பட்டியல்ல நம்மோட எந்த வசதியும் இல்ல நண்பா” என்று முடித்தான் ஐங்கரன்.
“டேய் என்னடா பேசுற? நம்ம ஊர்ல உனக்கு இருக்க மதிப்புக்கு, உங்க அப்பாவோட பவருக்கு, உலக நாடுகள்ல உன் ஆராய்ச்சிக்கு இருக்க முக்கியத்துவத்துக்கு இந்த காட்டுமிராண்டிக் கும்பலுக்குப் போய் பயந்துட்டு இருக்க. நீ நினைச்சா ஒரு சின்ன அமெண்ட்மென்ட் போட்டு பழங்குடி மக்கள் பாதுகாப்பு கருதி அது பண்றோம் இது பண்றோம்னு சொல்லி ஒரு குட்டி ராணுவத்தையே கூட்டிவந்து இங்க இறக்கி ரணகளமாக்கிடலாம். இப்பக்கூட நம்மகிட்ட துப்பாக்கி இருக்கு. நீ என்னடான்னா?” என்று முகம் கடுத்தான் அஞ்சுதன்.
இதைக்கேட்டதும் முறைத்தபடி,
“அஞ்சுதா! இது இவங்க தீவு. இவங்க ஆதிகுடிகள். நம்ம நோக்கம் என்னவா இருந்தாலும் நல்லதாகவே இருந்தாலும் இங்க இவங்க சட்டத்துக்கு நாம அடங்கித்தான் போகணும். அதுதான் சரியான வழி. பொறுப்பில்லாமப் பேசறத நிறுத்திட்டுப் பின்னாடி வா” என்று கட்டளையிட்டுவிட்டு பதிலை எதிர்பாராமல் விறுவிறுவென நடக்கத் தொடங்கினான் ஐங்கரன்.
அதன்பிறகு அஞ்சுதனும் ஏதும் பேசாமல் நடந்து இருவரும் குன்றின் அடியிலிருந்து குகையின் வாயிலருகே வந்திருந்தார்கள்.
குகையினுள் திட்டுத்திட்டாகத் தெறித்திருந்த நிலவொளியைத் தவிர்த்து, பிற இடங்களில் பரவியிருந்த காரிருளைக் கண்கொட்டாமல் பார்த்தபடியே, “அப்போ எப்படியும் நமக்கு சாவுதான், இல்லே” என்ற அஞ்சுதனின் குரல் உடைவதை உணர்ந்தான், ஐங்கரன்.
“டேய் அஞ்சு!” என்று ஆறுதல் சொல்லத் தொடங்க எண்ணிய ஐங்கரன் சட்டென அமைதியானான்.
அஞ்சுதன் அவனைப் புரியாமல் பார்க்க, “காலடிச் சத்தம்” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறிய ஐங்கரன், அஞ்சுதனின் கையினைப் பற்றி ஓசை எழாமல், குகையினுள் அழைத்துச் சென்றான்.
குகையின் வாயில் பின்பக்கத்தில் படர்ந்து இருந்த இருளில் இருவரும் மறைய, குன்றின் பக்கவாட்டின் வழியே வந்த மூவரும், குகைவாயில் வழி உள்வந்த நிலவொளியில் நிழலாய் விழுந்தார்கள்.
“அவர்கள் இந்தப் பக்கம் வந்தால் கொன்றுவிடு. குகையினுள் செல்ல விட்டுவிடாதே” என்று அவர்களது மொழியில் கூறிய நிழலொன்று, இருவரை அங்கேயே விட்டுவிட்டுத் தான் மட்டும் நகர்ந்தது.
வாயில்வரை வந்தவர்கள், உள்ளே வராமல் நின்றது அஞ்சுதனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. ஐங்கரன் கணிப்பு சரியாகவே இருக்கும் என்ற நம்பிக்கை உண்டாக்கியது. ஐங்கரன் அவனைத் தட்டி அழைக்க, இருவரும் அந்த இருளிலேயே குகைக்குள் தலையைக் குனிந்தபடி நடக்கத்தொடங்கினர்.
அவர்கள் நின்ற இடத்தில் படர்ந்து இருந்த வேர்களுக்கிடையே, வெண்கோடுகள் இட்ட கருவேர் ஒன்று மெல்ல அசைந்தது.
இருளுக்கு நன்கு பழகியிருந்த விழிகளால் குகையினுள் சிலவற்றைக் காண முடிந்தது.
நேராகச் சென்றுகொண்டு இருந்த குகை, வலதுபுறம் திரும்பியது. பள்ளமும் மேடும் மாறிமாறி வந்துபோனது. சட்டென குகை அடைத்து நின்றது.
“என்னடா குகை அவ்ளோ தானா?” என்றான் அஞ்சுதன்.
ஐங்கரன் பின்சென்று, பார்வையை மேலே துழாவவிட்டபடி, “இல்ல, மேல வழி இருக்கு” என்று கூறிவிட்டு, மீண்டும் அஞ்சுதன் அருகே வந்தவன்,
“என்னைத் தூக்கு” என்றதும் இருவரும் மேலே வந்தனர். ஆனால் அதுவும் குகையின் ஒரு பகுதியே.
மேல்வந்த அஞ்சுதன், “எப்போ குகையைவிட்டு வெளியே போவோம்?”
“ஏன்?”
“பசிக்கும்ல”
“டேய் டிக்டொக் பைத்தியமே” என்று சிரித்த ஐங்கரனுக்குத் தன் நண்பன் தனது இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தது மகிழ்ச்சியைத் தந்தது.
“கவலைப்படாத. சீக்கிரமே வெளிய போயிடலாம்” என்று அஞ்சுதன் தோளைத் தட்டியபடி கூறியவன், நடந்தபடி பேச்சைத் தொடர்ந்தான்.
“அப்புறம் குகையில அங்கங்க காளான், பூஞ்சைனு வளர்ந்து இருக்கும். பசிக்கிதுன்னு சாப்பிட்டு இல்லாத வம்பை இழுத்துட்டு வந்துடாத, வாயைக் கட்டுப்படுத்திக்கோ”
“அதுசரி. என்னைக் கொலைபண்ண வந்தவன் கூட கூண்டுல அடைச்சு வேளாவேளைக்குச் சோறு போட்டான். நீ நண்பன்னு சொல்லிக்கிட்டு…” என்று பேசிக்கொண்டு வந்த அஞ்சுதனைக், குகையினுள் விழுந்த நிலவொளி கீற்றுகள் வாயடைக்க வைத்தன.
அக்காட்சி அவன் மனதைக் கொள்ளைக் கொண்டது. நிலவொளியின் கீழ் மலர்ந்திருந்த ஊதா நிற மலரில் இருந்து பரவியிருந்த மணம், அந்த இடத்திற்கு அருகே செல்லச்செல்ல அதிகரித்தது.
ஐங்கரன் நடையின் வேகத்தைக் கூட்ட, அஞ்சுதனோ மணத்தின் மயக்கத்தில், “ப்பா செம்மையா இருக்கு” என்று கூறி, மூச்சை ஆழமாக இழுக்கத் தொடங்க,
சட்டென சுதாரித்த ஐங்கரன், அஞ்சுதனின் நாசியைக் கையால் இறுக்க மூடி, அவனை இழுத்தபடி வேகமாக நடந்து சிறிது தூரம் கடந்து தரையில் அமர்த்தினான். பூவின் மணம் குறையத் தொடங்கி, முற்றிலுமாய் மறையவே, ஐங்கரன் அஞ்சுதனின் நாசியை விடுவித்தான்.
இதனால் மூச்சுத்திணறலுக்கு ஆளான அஞ்சுதன் கடுமையாகத் தும்மியபடியே கோபமாக, “என்னடா பண்ணுற?” என்றான்.
“நீ என்னடா பண்ணின அங்க? இன்னும் கொஞ்சம் சேர்த்து இழுத்து இருந்தன்னா, அங்கேயே பொத்துன்னு விழுந்து இருப்ப கிறுக்குப்பயலே.”
“ஆ…” என்று வியந்த அஞ்சுதன் இயல்பு நிலைக்கு திரும்ப சிறிது நேரம் எடுத்துக்கொண்டான்.
அஞ்சுதன் இயல்பானதும், இருவரும் நடக்கத் தொடங்கினார்.
அஞ்சுதன், “ஆனா, அது செம்ம ஸ்மெல்டா. அவ்ளோ நல்லாருந்தது”
“இந்த உலகத்துல நல்லா இருக்குன்னு நமக்குத் தோனுறது எல்லாமே நம்மை அங்கேயே தேங்க வச்சிடும். நீயும் அங்கேயேதான் இருந்து செத்துருப்ப” என்றான் ஐங்கரன்.
“ஓ… தத்துவம். இருக்கட்டும் இருக்கட்டும். ஆமா அது என்ன பூ?” என்று வினவியபோது, ஐங்கரன்
“ம்ம். குஷ்ப்…. ஏய் நில்லு” என்று அஞ்சுதன் மார்மேல் கைவைத்து, அவனை நகரவிடாமல் தடுத்தான்.
“இப்ப என்னடா?” என்று சலிப்பானான் அஞ்சுதன்.
“டேய்! குழிடா”
அப்போதுதான் அத்தனை நீளமான குழி அவன் கண்களுக்குத் தெரிய ஆரம்பித்தது.
“யப்பா, குழி என்ன இவ்ளோ நீளமா இருக்கு!” என்றான் அஞ்சுதன் வியப்பாய்.
“ஆமா. ஓடிவந்துலாம் தாண்ட முடியாது”
“எவ்ளோ ஆழம் இருக்கும்? முட்டியளவு??”
“இல்ல. உன்னை முழுங்குற அளவு”
“இப்ப எப்படி இதைத் தாண்டிப் போறது? போச்சு. போச்சு. எல்லாம் போச்சு. வெளிய போனா பலி. உள்ள வந்தாக் குழி. சாகப்போறேன் நான்” என்று புலம்பத் தொடங்கினான் அஞ்சுதன்.
“ப்ச். இரு. யோசிப்போம்” என்ற ஐங்கரன் எழுந்து, குகையை நன்கு ஆராய்ந்தான்.
பின் பக்கவாட்டுச் சுவரைப் பார்த்து“வழி இங்க இருக்கு. வா போகலாம்” என்றான்.
அஞ்சுதனும் அதைக் காண, “எது இதுலயா? டேய்! சர்க்கஸ்காரன்கூட இப்படி போகமாட்டான்”
“ஆனா, சாவை எதிர்க்கிறவன் போய்த்தான் ஆகணும்” என்ற ஐங்கரன், குகையின் பக்கவாட்டில் சாய்ந்தபடி அத்திட்டில் நகரத் தொடங்க, அஞ்சுதனும் வேறு வழியின்றி அவனைத் தொடர்ந்தான்.
குகை வலதுபக்கமாகத் திரும்ப, சிறிது தூரத்தில் மீண்டும் அடைத்திருந்தது. அடைப்பின் இடையே விழுந்திருந்த கீறல் வழியே, வெள்ளொளி பரவிக்கொண்டிருந்தது.
ஐங்கரன் ஓடிச்சென்று, ஒளிவரும் கீறல்வழி, விழியை ஓடவிட்டான். உள்ளே தெரிந்த இடம், ஒளிமிகுந்து இருக்கவே, குகையின் மேற்பகுதியும், அதன்வழி இறங்கிய நிலவொளியும் தெரிந்தது. நிலவொளி விழும் இடத்தில், ஒரு சிலை தெரிந்தது. போருடையில் நின்ற அந்த சிலையின் ஒரு கை நீட்டியிருக்க, அக்கையில்,
“டேய்! காப்புடா” என்றான் ஐங்கரன் வியப்புமிகுதியில்.
“எங்க நான் பாக்குறேன்” என்று முன்வந்த அஞ்சுதனை நிறுத்தி,
“இரு! இரு! இரு!” என்ற ஐங்கரன் காப்பினைச் சுமந்துகொண்டு இருந்த சிலையை ஆராய்ந்தான். அதைப் பார்க்க பார்க்க அவனுக்கு வியப்பு அதிகரித்தது.
“டேய்! அந்தச் சிலையைப் பாரேன்” என்றான் அஞ்சுதனுக்கு வழிவிட்டான்.
ஆனால் அச்சிலையை அடைய இயலாதவாறு குறுக்கே பெரும்பாறையால் அடைக்கப்பட்டிருந்தது.
எப்படியும் குகைக்கு வெளியே போக வழி இருக்குமென்பதால் இருவரும் தேடி ஒரு சிறு இடைவெளியைக் கண்டனர்.
இரண்டடி இடைவேளி அது. ஐங்கரன் படுத்து அதனுள் பார்க்க, இருள் மட்டுமே இருந்தது.
“சரி என் பின்னாடியே வா” என்ற ஐங்கரன் அந்த இடைவெளியினுள் நுழைந்தான். அந்த இடைவெளி மெல்ல மேடேறியது. மேடு ஏற ஏற, இடைவெளியின் அளவும் விரிவானது. முழங்காலிட்டு நடந்தனர். எழுந்து நிற்குமளவு இடைவெளி உண்டாக, ஐங்கரன் முதலில் எழுந்தான்.
தூரத்தில் கீழே தெரிந்த சிலையின் கையில் காப்பு மிளிர்ந்தது. சிலையின் அருகே நின்றிருந்த ஓநாயைக் கண்ட ஐங்கரன், எழ முயன்ற அஞ்சுதனைத் தடுத்து, தானும் முழங்காலிட்டான்.
“என்ன?” என்றான் அஞ்சுதன், ஐங்கரனின் படபடப்பை உணர்ந்து, அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்.
“ஓநாய்ங்க இருக்…” என்றவன் பாதியில் நிறுத்திவிட்டு, மெல்லத் திரும்பி, படுத்தபடியே அவர்கள் இருந்த பகுதியின் விளிம்பிற்கு வந்து, மீண்டும் ஓநாய்களை ஆராய்ந்தான்.
மொத்தம் மூன்று ஓநாய்கள் சுற்றி நின்றிருந்தன. அவற்றின் விழிகள் ரத்தச்சிவப்பில் குளித்திருந்தன. அந்த இடம் அகலமாக விரிந்திருந்தது. மறுபுறம் வெளியே செல்லும் வழியும் தெரிந்தது. ஓநாய்களைத் தாண்டிக் காப்பை எடுப்பதும் சாத்தியமல்ல. காப்பு இன்றி வெளியேறுவதும் சாத்தியமல்ல என்பது இருவருக்கும் நன்கு புரிந்தது.
சிறிது நேரம் கண்களை மூடிய ஐங்கரன் மெல்ல விழித்தான்.
“சரி வா அஞ்சுதா. இதோ இந்த வேரைப் பற்றிக்கொள். மேலே ஏறி இந்தக் கற்களை நாலாபுறமும் எறி. ஓநாய்களைக் குழப்பு. நான் உள்ளே புகுந்து காப்பை எடுத்துடறேன். துப்பாக்கில ஒரே ஒரு தோட்டாதான் இருக்கு. அதைத் தேவைப்பட்டா பயன்படுத்திக்கலாம்” என்று ஐங்கரன் கூறவே,
“டேய். வேணாம். இதுல ஆபத்து அதிகம்.” என்றான் அஞ்சுதன்.
“வேற வழியில்ல அஞ்சுதா” என்றபடி வேரைக் கொடுத்தான்.
அவன் கூறியபடி மேலேறிய அஞ்சுதன் ஓநாய்களைக் குழப்பத் தொடங்க, மின்னலெனப் பாய்ந்த ஐங்கரன் காப்பைக் குறிபார்த்து எடுத்த கையோடு, சிலை மீதே கால்வைத்து ஏறி மேலே தொங்கிக்கொண்டிருந்த வேரைப் பற்றித் தொங்கியபடியே குகையின் வெளிவாசலை நோக்கிக் குதிக்கச் செல்லும்போதுதான் அஞ்சுதன் பிடித்திருந்த வேரின் மீது நகர்ந்து வந்த பாம்பைக் கவனித்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் தன் துப்பாக்கியை எடுத்து அஞ்சுதனை நோக்கி வந்த பாம்பைச் சுட்டு வீழ்த்திடவே, பதட்டத்தில் தடுமாறிக் கீழே விழுந்தான் அஞ்சுதன். இதற்குள் துப்பாக்கிச் சத்தம் கேட்டு, கூடவே அந்தப் பாம்பும் மேலே விழுந்ததால் எதிர்பாராவிதமாக ஓநாய்கள் அலறி ஓடத் தொடங்கின. அதே நேரம் குகை வெளிவாசலுக்கு முன் அனைத்து ஆதிகுடிகளும் ஒன்று கூடத் தொடங்கினர். வெளியே சற்றே விடியத் தொடங்கியிருந்தது.
அஞ்சுதன் பதட்டத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான். என்னதான் காப்பு கையில் இருந்தாலும் திருடவந்ததாகத் தவறாக எண்ணிவிட்டால் என்ன ஆவதென்ற பயமும், இத்தனை முயற்சி செய்து அடைந்த காப்பை இழக்க வேண்டியிருக்குமோ என்ற வருத்தமும் அவனைச் சூழ்ந்திருந்தன.
அடுத்து வந்த மறுவாசல் வழியே இருவரும் முன்னேற, குகையின்மறுபக்கத்தில் தீவு மக்கள் அனைவரும் தத்தமது ஆயுதங்களுடன் ஆயத்தமாக நின்றுகொண்டிருந்தனர்.
மெல்ல வெளிவந்த ஐங்கரனையும் அஞ்சுதனையும் கண்டு, வியப்படைந்து, கோபமுற்று, அவர்களை நோக்கிக் கைகளிலிருந்த ஈட்டியை உயர்த்தி அவர்களிருவரையும் குறிவைக்க, அதுவரை அமைதியாக இருந்து ஐங்கரன் தன் கையில் இருந்த காப்பினை உயர்த்தினான்.
அதைக் கண்டதும் அத்தீவுக்கூட்டத்தின் தலைவனின் விழிகள் எல்லாப்பக்கமும் முடிந்த அளவு விரிந்தன.
அருகில் இருந்தவனிடம், “அவர்கள் இந்தத் தீவைக் கடந்து வெளியேற ஏற்பாடு செய்யுங்கள்” என்று படபடப்புடன் கூற, மூவர் ஓடினர்.
ஐங்கரனைக் கண்டு, தலைவன் பணிவன்புடன் முழங்காலிட்டு, தலை தாழ்ந்து அமரத் தொடங்க, அவர்களை கையசைத்து எழுப்பிய ஐங்கரன் தன் கைகளைக் கூப்பி வணக்கம் கூறினான். அவனது அசைவுக்குக் கட்டுப்பட்டவர்களைப் போல அனைவரும் அதையே செய்தனர்.
அஞ்சுதனுக்கு ஒன்றும் புரியாமல் ஐங்கரனைத் தழுவிக்கொண்டான். அதன்பிறகு அந்தக் காப்பைப் புன்முறுவலோடு அவர்களிடமே ஒப்படைத்துவிட்டு இருவரும் தாங்கள் வந்த விமானத்தை நோக்கி நடக்கத் தொடங்கினர்.
“இவ்ளோ செஞ்சும் எல்லாம் போச்சுல்ல. காப்பும் போச்சு. ஆராய்ச்சியும் போச்சு.” என்று புலம்பிக் கொண்டே வந்த அஞ்சுதன் ”ஆமா. நீ ஏன்டா எல்லாருக்கும் வணக்கம்லாம் வச்ச? அவனுங்களும் பதிலுக்குக் கும்புடுறானுக. காப்பையும் கொடுத்துட்டு சிரிச்சுட்டே வர்ற. என்னதான்டா உன் கணக்கு?” என்று நச்சரித்தான்.
“அட. இப்ப என்ன? நாம இங்க தேடி வந்தது அந்தக் காப்பை இல்ல. இதத் தான்” என்றபடி தன் மேற்சட்டையின் உள்ளிருந்த பையை விரித்தான் ஐங்கரன்.
அதில் அந்த மயக்கமூட்டும் மலர் வேரோடு இருந்தது. அதன் விதைகளும் இருந்தன. வாசம் பரவுவதற்குள் உடனடியாக மூடிய ஐங்கரன்
“அஞ்சுதா! இந்தப் பூதான் இந்தத் தீவின் புதையல். இதைப்பற்றிய குறிப்புகள் கிடைச்சப்ப வியப்பா இருந்துச்சு. இதைத் தேடித்தான் இந்தத் தீவுக்கே வந்தேன். ஆனா இதுக்குத் தான் வர்றேன்னு தெரிஞ்சா நீ சொன்ன மாதிரி ஊரே படையெடுத்து வந்துடுவாங்க. அதனால தான் தொடர்பே இல்லாம அந்தக் காப்பைத் தேடி வந்ததா சொல்லி அந்த மொழிபெயர்ப்பாளரையும் கூட்டிட்டு வந்தேன். சுத்திப் பார்க்கப் போற மாதிரி இருக்கட்டும்னு உன்னையும் அழைச்சுட்டு வந்தேன். ஆனா நம்ம கெட்ட நேரம் இந்த ஆதிகுடி மக்கள் அவரைக் கொன்னுட்டாங்க.
அப்பதான் முன்னேற்பாடு இல்லாம வந்தது தப்புன்னு உரைச்சது. வேற வழியில்லாம உண்மையாவே காப்பைத் தேடி எடுத்துத்தான் உயிரைக் காப்பாத்திக்கணும்னு ஆயிடுச்சு. இதையெல்லாம் உன்கிட்ட முன்கூட்டியே சொல்லிருக்கலாம். ஆனா நீ பதட்டப்படாம வந்துருக்க மாட்ட. எல்லாம் கெட்டிருக்கும். இங்க வந்து உன் மூலமாத் தான் அந்த பூவை என்னால அடைய முடிஞ்சது. நீ மயங்கி இருந்த போதே அதை எடுத்துவைச்சுக்கிட்டேன். நான் ஏற்கனவே அதுல மயங்காத மாதிரி மருந்து சாப்பிட்டு வந்ததால எனக்கு எதுவும் ஆகல.
குகையை விட்டு வெளிய வந்ததும் இதுல ஒரு சின்ன பகுதியை எடுத்து காத்துல கரைச்சு காப்பைத் தூக்கிக் காட்டியதும் எல்லாருக்கும் ஒருவித மயக்கம் உண்டாச்சு. காப்பைப் பாத்ததால மட்டும் அந்தத் தலைவன் நம்மை விட்டுடல. இந்தப் பூவோட வாசமும் ஒரு காரணம். இப்ப இந்தச் செடியோட வேர் விதைன்னு எல்லாமே இருக்கு நம்மகிட்ட. இது நம்ம நாட்டு சூழ்நிலைல வளருமான்னு பாக்கணும். இந்தப் பூ மருத்துவத்துறையில புரட்சியை உண்டுபண்ணப் போகுது. சரியாகப் பயன்படுத்துனா ஆழ்ந்த மயக்கத்திற்கு இட்டுச் சென்று செயல்படாத உடல் உறுப்புகளைச் செயல்படவைக்கறதும் இந்தப் பூவால நடக்கும். எடுத்துக்காட்டா, கணையம் சரியா செயல்படத் தொடங்கினா இன்சுலின் உற்பத்தி சீராகும். சர்க்கரை நோயே குணமாகும். இப்டிப் பல அற்புதங்கள் இந்தப் பூவால நடக்கும். இனிதான் என் சிறந்த ஆராய்ச்சி தொடங்கப்போகுது” என்று முடித்தான் ஐங்கரன்.
“அப்ப நாம திருப்பி இங்க வருவோமா?” என்ற அஞ்சுதனிடம்,
“ம்ம். கண்டிப்பா. அதுக்கான குறியீடுதான் அந்த வணக்கம். அதுதான் நம்ம பாஸ்வேர்ட் இனி. அப்ப கிளம்புவோமா?” என்று மெல்லச் சிரித்து வினவியபடி நடக்கத் தொடங்கினான் ஐங்கரன்.
இதுவரை இருளில் உறங்கிக்கிடந்த கதிரவன் மெல்லத் தன் கரங்களை விரிக்கத் தொடங்கினான்.
‘ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து
ஆமைபோல், ஆபத்து காலத்தில் தன் ஐம்பொறிகளையும் அடக்கியாளும் திறன் கொண்டவன், அத்திறனைக் கொண்டே ஆபத்தில் இருந்து மீள்வான்’
-முற்றும்-
-ஊதா மூங்கில் மற்றும் வே.கார்த்திகேயன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக